பலதும் பத்தும்

விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய சீன ராக்கெட்

சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று, புறப்பட்ட 85 வினாடிகளிலேயே திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ‘சோங்ஜிங்-4பி’ (Chongqing-4B) தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நோக்கில் இந்த ராக்கெட் ஏவப்பட்டிருந்தது.

இதற்காக, சீனாவின் ஹைனான் மாகாணத்தில் அமைந்துள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச் 7A’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டு சுமார் 85 வினாடிகள் கடந்த நிலையில், எதிர்பாராத விதமாக நடுவானில் வெடித்துச் சிதறியது.

இந்த வெடிப்பில் ராக்கெட்டுடன் அதனுள் கொண்டு செல்லப்பட்டிருந்த சோங்ஜிங்-4பி தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் முற்றிலுமாக அழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கான சரியான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது உந்துவிசை அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட காரணங்கள் குறித்து ஆய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள ‘லாங் மார்ச் 7A’ ராக்கெட்டுக்கு இது இரண்டாவது தோல்வி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விண்வெளித் திட்டத்தில் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்காக இந்த ராக்கெட் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏவப்பட்ட சில நொடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியிருப்பது சீனாவின் விண்வெளித் திட்டத்திற்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

வெடிப்புக்கான காரணம் மற்றும் இந்த தோல்வியால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து சீன விண்வெளி அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆய்வின் முடிவுகளுக்குப் பின்னரே மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button