உலகம்

18 மாத கால பேச்சுவார்த்தை: சிரியா – ரஷ்யாவிற்கு இடையில் ஒப்பந்தம்

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்ள மொஸ்கோவின் இராணுவத் தளங்களின் எதிர்காலம் குறித்து அந்நாட்டுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய படியாகும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

18 மாத கால தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டார்டஸ் மற்றும் ஹ்மெய்மிமில் உள்ள ரஷ்ய தளங்களின் எதிர்காலத்தை முடிவு செய்வதற்காக சிரியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சிரிய வெளியுறவு அமைச்சகம் நேற்று இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

ஹ்மெய்மிம் விமான நிலையம் மற்றும் டார்டஸ் துறைமுகத்தில் உள்ள வர்த்தகத் தளம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான வசதிகளின் நிர்வாகத்தை சிரிய அரசு ஏற்கும் என்றும், அவை படிப்படியாக நாட்டின் பொது நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

அதேநேரம் இராணுவ வசதிகள் கூட்டுப் பயிற்சி மையங்களாக மாற்றியமைக்கப்படும் என்றும், இந்த மாற்றம் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய பயிற்சி மையங்களில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும், ஆனால் அங்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்பது குறித்த விவரங்கள் தன்னிடம் இல்லை என்றும் விடயத்தை நன்கு அறிந்த வட்டாரம் ஒன்று ரொய்டர்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button