இலங்கை

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை; சிறிதரனுக்கு சி.வி.கே. சிவஞானம் தெளிவுபடுத்தல்!

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆறு தமிழ் பேசும் மக்களது கட்சிகள் இணைந்து உருவாக்கிய அமைப்பு பற்றி அரசியல் குழுவில் ஆராயப்பட்டதன் பின்னரே அதில் எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.தனிப்பட்ட காரணங்களால் நான் கலந்து கொள்ளாவிட்டாலும் விபரங்கள் எனக்கு தெரிவிக்கப்பட்டே வந்தன. தாங்கள் குறிப்பிட்டது போல எந்த ஒரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை என்பது எனக்கு தெளிவாக தெரியும் என்பதை உறுதிப்படுத்தி தெரிவிக்கிறேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் 2026.08.02 ஆம் திகதியன்று பொதுச்செயலாளர் மற்றும் அரசியல்குழு உறுப்பினர்கள் ஆகியோரை மேற்கோட்காட்டி பதிவிட்ட விடயம் தொடர்பில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

தாங்கள் தனியார் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ள பல விடயங்கள் நீதிமன்ற வழக்குடன் தொடர்புடையது என்பதால் அவற்றை தவிர்த்து இரண்டு விடயங்களை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

முதலில் தாங்கள் மனோ கணேசனிடம் இருந்து பெற்றது ஒரு எண்ணக்கரு பத்திரம் மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது. 2023 நவம்பர் மாதம் 05 ஆம் திகதி வவுனியாவில் நடந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் நானும் கலந்து கொண்டதாக குறிப்பிட்டு உள்ளீர்கள் ஆனால் அது தவறு. நான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆறு தமிழ் பேசும் மக்களது கட்சிகள் இணைந்து உருவாக்கிய அமைப்பு பற்றி அரசியல் குழுவில் ஆராயப்பட்டதன் பின்னரே அதில் எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.தனிப்பட்ட காரணங்களால் நான் கலந்து கொள்ளாவிட்டாலும் விபரங்கள் எனக்கு தெரிவிக்கப்பட்டே வந்தன. நீங்கள் குறிப்பிட்டது போல எந்த ஒரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை என்பது எனக்கு தெளிவாக தெரியும் என்பதை உறுதிப்படுத்தி தெரிவிக்கிறேன்.

பல விடயங்களில் ஒன்றில் நீங்கள் என்னிடம் விசாரிப்பது அல்லது நான் உங்களுக்கு தெரிவிக்கும் முறை எம்மால் பின்பற்றப்பட்டு வந்தன. அப்படியிருக்கும் போது இது பற்றி பொது வெளியில் கருத்து தெரிவிக்கும் முன்பு என்னிடம் விசாரித்திருந்தால் மக்கள் மத்தியில் இதிலும் கட்சிக்குள் பிளவு என்ற கருத்து ஏற்பட வாய்ப்பு இருந்து இருக்காது. இது தவிர்க்கபட்டிருக்க வேண்டும்,

இலங்கை தமிழரசு கட்சியின் பதவிகளில் இருப்பவர்களும் அதனூடாக தேர்தல் மூலம் பதவி வகிக்கும் நாம் எல்லோரும் கட்சியின் பாதுகாவலர்கள் மற்றும் நம்பிக்கை பொறுப்பாளர்களும் ஆவோம் என்பதை சகலரும் கட்டாயமாக மனதில் கொள்ளவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button