பாடசாலைக்குள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடு; ஆசிரியர்கள் உட்பட 06 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்படக் குறைந்தது 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
அண்மைக்காலத்தில் தாய்லாந்து பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.
பாங்கொக்கிற்கு வடக்கே நோந்தாபுரி மாகாணத்தில் சுமார் 3,000 மாணவர்கள் கல்வி பயிலும் பிரபல இடைநிலைப் பாடசாலையான ‘டெப்சிரின் நோந்தாபுரி பாடசாலை’ வளாகத்திலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 03 ஆசிரியர்கள் மற்றும் 03 மாணவர்கள் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் திரைராங் பிவ்பான் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் உயிரிழந்துவிட்டதாக ஆரம்பகட்ட செய்திகள் வெளியாயினும், அவன் உயிருடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பாடசாலை வகுப்பறையின் தரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இத்துப்பாக்கி மாணவனின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது எனக் நம்பப்படுகிறது.
![]()