இலங்கை

“வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்”

வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில்  உரையாற்றிய போதே இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரிடம் நான் மேலதிக கேள்விகளை முன்வைத்தேன்.

அமைச்சர் தனது பதிலில் பல விடயங்களை விரிவாக விளக்கினார். ஒவ்வொரு பதிலுக்கும் தனித்தனியாக கேள்வி எழுப்புவதற்கான அவசியம் இருந்தபோதிலும், பாராளுமன்ற நேரக் கட்டுப்பாடு காரணமாக அனைத்தையும் விவாதிக்க முடியவில்லை.
அமைச்சர் தனது பதிலில் ‘அதியுயர் பாதுகாப்பு வலயம்’ என்ற விடயத்தை குறிப்பிட்டார். ஆனால், அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், யுத்தக் கால சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை, தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து அதே வகையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே கலந்துரையாடப்பட்ட முக்கிய கருத்தாக இருந்தது.

மேலும், து252 முதல் து256 வரை உள்ள பலாலி பகுதிகளிலும், து246, து 248 மற்றும் து 257 ஆகிய மயிலிட்டி பகுதிகளிலும் அமைந்துள்ள மதத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், நடைமுறை நிலைமை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. புனித செபஸ்தியார் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை, வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. குறிப்பாக, புனித செபஸ்தியார் தேவாலயம் இருந்த இடமே இன்று இல்லாத நிலையில், அங்கு வழிபடுவதற்கு மதத் தலம் உள்ளது எனக் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும்.

அமைச்சர் அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, மாவட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். எனினும், காணி கோரி விண்ணப்பித்துள்ள 44 பேரில் வெறும் 11 பேருக்கு மட்டுமே காணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காணி உரிமையாளர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அணுகுமுறையாக இல்லை. மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில், சுமார் 80 இலட்சம் ரூபாய் செலுத்தி தனியார் காணிகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இங்கு எழும் அடிப்படை கேள்வி என்னவென்றால், தனியார் காணிக்குள் இராணுவத்தினருக்கு கட்டடங்களை நிர்மாணிக்க அனுமதி வழங்கியது யார்? உரிமையாளர்களின் அனுமதியின்றி தனியார் காணிகளில் கட்டடங்களை நிர்மாணித்துவிட்டு, பின்னர் அதற்காக 80 இலட்சம் ரூபாய் செலுத்தி காணியை அரசிடம் ஒப்படைக்குமாறு கூறுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயற்பாடாகும்.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் எந்தவித தாமதமும் இன்றி, எந்த நிபந்தனையும் இன்றி, அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். நீண்டகாலமாக நீடித்து வரும் இந்த காணி பிரச்சினைக்கு அரசு நீதி, சட்டம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அசல் மற்றும் அரச காணிகளின் மொத்த பரப்பளவு எத்தனை,? தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளின் பரப்பளவு, அமைவிடம் மற்றும் திகதிகள், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் எஞ்சியுள்ள காணிகளின் பரப்பளவு, மற்றும் எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலவரையறை என்ன ?

வலிகாமம் வடக்கில் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படாமலும், 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படாமலும் உள்ள நிலையில்,பொதுமக்கள் காணிகளை விடுவிக்கும் பணிகளை நிறைவு செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மயிலிட்டி மற்றும் பலாலியில் நடந்த போராட்டங்கள் தொடர்பாகவும், மயிலிட்டி கன்னிக்கன் மாதா கோவில், வாசவிளான் செங்குந்த விநாயகர் ,மண்ணம்பிராய் பிள்ளையார் கோவில், புனித செபஸ்டியான் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் வாசவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை காணிகளை மீட்டெடுக்க யாழ்ப்பாண மாவட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை விரிவாக்கம், 551 பிரிவுப் பகுதியில் உள்ள காணிகள், இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோவில், இரணைமடு சந்தி மற்றும் விவசாயத் திணைக்களத்தைப் பாதிக்கும் காணிகளை விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள 59 ஏக்கர் சிவில் காணிகளை விடுவிக்க முல்லைத்தீவில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆகிய கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button