கவிதைகள்
சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!ஜெயராமசர்மா

ஆர நவமணி மாலைகள் ஆட
அம்மை யோடப்பன் ஆடினார் நடனம்
ஆடும் அரவம் அசையா நின்றது
அமரர் அனைவரும் அரகரா என்றனர்
நாரதர் தம்புரா நயமாய் மீட்டினார்
நந்தியின் மத்தளம் சேர்ந்துமே ஒலித்தது
வாணியின் வீணை வழங்கிய நாதம்
மாதொரு பாகனின் ஆட்டத்தில் கலந்தது

மண்ணும் மகிழ்ந்தது விண்ணும் மகிழ்ந்தது
மாதொரு பாகனின் அடியார் மகிழ்ந்தார்
திருமுறைச் செல்வர்கள் திருவடி தொழுதனர்
ஆனந்தக் கடலில் அனைவரும் மூழ்கினர்
வேதம் அனைத்தும் கையைக் குவித்தது
தத்துவம் எல்லாம் தம்மை மறந்தது
தீமைகள் அனைத்தும் தெறித்து ஓடின
நன்மைகள் மலர்ந்து நறுமணம் எழுந்தது
மாதொரு பாகன் ஆடா நின்றால்
பூமியில் எதுவும் அசையா நின்றிடும்
இறைவனின் நடனமே இயக்கும் சக்தி
சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()