அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய்!… கவிதை… ஜெயராமசர்மா

காலனைக் காலால் உதைத்ததும் சிவமே
கண்ணப்பன் கண்ணை ஏற்றதும் சிவமே
ஆலமாம் விஷத்தை உண்டதும் சிவமே
அனைத்துமாய் எங்கும் இருப்பதும் சிவமே
பிட்டுக்காய் மண்சுமந்து நின்றதும் சிவமே
பிரம்படி ஏற்றிட வந்ததும் சிவமே
கெட்டவர் ஆயினும் கேட்டிடும் வரத்தைக்
கொட்டியே கொடுப்பதும் சிவமே ஆகும்
விண்ணும் சிவமே மண்ணும் சிவமே
உண்ணும் உணவெலாம் கொடுப்பதும் சிவமே
எண்ணம் சிவமே எழுத்தும் சிவமே
இயக்கம் சிவமே இயக்குநர் சிவமே
ஆதியும் அந்தமும் இல்லா சிவமே
அனைத்துக்கும் ஆதியாய் அமைந்தது வியப்பே
சோதியின் தொடக்கம் யாருக்குந் தெரியா
சோதியாய் ஆனதும் யாரெனத் தெரியோம்
விடை தெரியாத வினாக்கள் பற்பல
விடை தெரியாது தவிக்கிறோம் யாவரும்
மாலும் தேடினார் அயனும் தேடினார்
விளங்கா நிலையில் சிவத்தை நாடினார்
உப்புக் கடலருகே உவப்பான நீருக்கு
உயர்வான மலைகளிலே உன்னத மருந்திருக்கு
சிப்பிக்குள் முத்திருக்கும் சிலந்திக்குள் திறனிருக்கு
எப்படித்தான் வந்ததுவோ எவருக்கும் தெரியாது
இருப்பார்க்கு இருப்பான் இல்லார்க்கு இல்லான்
இல்லானே என்பார் இயற்கையே என்பார்
ஏகனும் அவனே அநேகனும் அவனே
இயற்கையும் அவனே இயக்கமும் அவனே
அவனின்றி ஓர் அணுவும் அசையாது
அணுவாயும் இருப்பான் அதைத்தாண்டி இருப்பான்
ஆணவத் தோடவனைத் தேடினால் தெரியான்
அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()