தையிட்டியில் போராட்டம்!; இன்றும் முன்னெடுப்பு

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடாத்தப்பட்டது.
நேற்றைய போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ், கட்சியின் பிரச்சாரச் செயலாளரும், சட்டத்தரணியுமான ந.காண்டீபன், கட்சியின் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை,பெளர்ணமி நாளான இன்று புதன்கிழமையும் (29) காலை 7 மணி முதல் மாலை 06 மணி வரை தொடர்ப் போராட்டம் இடம்பெறும்.
![]()