எங்கும் இருப்பான் முருகனே!…. கவிதை… ஜெயராமசர்மா

கால் வண்ணம் கண்டேன்
கழல் தொழுது நின்றேன்
வேல் வண்ணம் கண்டேன்
விழுந்து நான் விட்டேன்
மால் மருகன் முருகன்
மா அடியைப் பற்றினேன்
பால் வண்ணங் கண்டேன்
பரவசத்தில் மூழ்கி விட்டேன் !
சேல் கொண்ட கண்ணழகி
தேவ யானை கண்டேன்
மனத்தால் அரு கணைந்த
வனக்குறவர் மகள் கண்டேன்
ஒளவை பால் அன்பால்
அமுதத் தமிழ் கொட்டியது
அருணகிரி மேல் அன்பால்
அருந்து கிறோம் தத்துவப்பால்

திருமுகன் வைத்த அன்பால்
குமரகுரு தமிழ்ப் பாலை
பக்தி மயம் ஆக்கியே
பருகிடவே வைத்து விட்டார்
வஞ்சத்தால் மனம் மாறா
வஞ்சகராம் சூரர் தமை
வெஞ்சினத்தால் வேர் அறுத்த
வேல்முருகன் கால் பணிந்தேன்
பால் எல்லாம் முருகனே
பல் சுவையும் முருகனே
வேல் என்றால் முருகனே
நால் வேதம் முருகனே
எல்லாப் பாலிலும் முருகனே
எல்லாச் சுவையிலும் முருகனே
இல்லா இடமே இல்லையே
எங்கும் இருப்பான் முருகனே !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()