இலங்கை

மண்டைதீவு புதைகுழி வழக்கு செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

மண்டைதீவு படுகொலையின் வழக்கு (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின் விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்ரபெலினாவுடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப் பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.

பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின் போது வழக்காளிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் குறித்த விடையம் தொடர்பிக் அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று, கிராம சேவகர், பிரதேச செயலர், பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி, பொலிஸார், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.

அத்துடன் சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான நிதிதிரட்டலுக்கு துறைசார் அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காடியிருந்தனர்.

முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களை அடுத்து குறித்த வழக்கு வரும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button