உலகம்

பெர்லின் ‘ப்ரைட்’ பேரணியில் காரை ஏற்றித் தாக்குதல்!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஆசிய – ஐரோப்பிய அளவிலான மிகப்பெரிய ‘கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே’ ‘ப்ரைட்’ பேரணியின் நிறைவுப் பகுதியில், வெள்ளை நிற கார் ஒன்று கூட்டத்திற்குள் அதிவேகமாகப் புகுந்து நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(25) இரவு சுமார் 10.00 மணியளவில், பெர்லினின் பிராண்டன்பெர்க் கேட் அருகே அமைந்துள்ள ‘டீர்கார்ட்டன்’ பூங்கா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மக்கள் அமைதியான முறையில் இசைக் கச்சேரியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்திற்குள் அதிவேகமாக நுழைந்த வெள்ளை நிற கார், மக்கள் மீது மோதியதுடன் மரத்தின் மீதும் மோதி நின்றது. வாகனத்தை ஓட்டி வந்த நபர் உடனடியாக தப்பி ஓடிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 16 பேரில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் பெர்லினின் பல்வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தாக்குதலைத் தொடர்ந்து, நள்ளிரவு வரை நடைபெறவிருந்த அனைத்துப் பேரணிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் உடனடியாக இரத்து செய்யப்பட்டு, மக்களைப் பாதுகாப்பான வழிகளில் வீடுகளுக்குச் செல்லுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

இக்கொடூரத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சான்சலர் மெர்ஸ், “இந்த வன்முறைச் செயல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

இவரை தொடர்ந்து, பெர்லின் மேயர் காய் வேக்னர் “நமது சுதந்திரமான மற்றும் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் இது. நமது வாழ்வியலையும் சுதந்திரத்தையும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button