பலதும் பத்தும்

சிறைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற பூனை

சிறைச்சாலை ஒன்றிற்குள், போதைப்பொருள்களைப் கடத்த முயன்ற பூனை ஒன்றை பொலிஸார் மடக்கிப்பிடித்த சுவாரசியமான சம்பவம் ஜூலை 21ஆம் திகதி நடைபெற்றுள்ளது. மேற்கு ரஷ்யாவின் ‘நிழ்னி நோவ்கோரோட்’ (Nizhny Novgorod) பகுதியில் அமைந்துள்ள சிறைக்குள்ளே இந்த பூனை போதைப்பொருளை கடத்தியுள்ளது.

அச்சிறைச்சாலையின் அதிகாரிகள் அந்தப் பூனையைப் பிடித்து, அதன் கழுத்தில் சுற்றப்பட்டிருந்த இரண்டு கைவினைப் பட்டைகளைப் (Collars) பிரித்தெடுத்து, அதற்குள் பொதி செய்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

நாய் மற்றும் பூனைகளுக்கிடையிலான வழக்கமான மோதலுக்கு அமைவாக, பூனை சிறை வளாகத்திற்குள் நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாகவே, போதைப்பொருள் கடத்தி வரப்படுவதைச் மோப்ப நாய்கள் முதன்முதலில் கண்டறிந்தன. உடனே விழித்துக்கொண்ட பொலிஸார், அந்தப் பூனையை விரைந்து பிடித்துள்ளனர்.

பூனையின் கழுத்திலிருந்த பட்டைகளைக் கழற்றிய அதிகாரிகள், அதற்குள் இருந்தது போதைப்பொருள் என்பதை உறுதிசெய்து அவற்றை முழுமையாகக் கைப்பற்றினர்.

இது தொடர்பாக ‘ரஷ்ய கூட்டாட்சி சிறைச்சாலை சேவை’ (Federal Penitentiary Service of Russia) தனது தந்திச் செயலியில் (Telegram) பதிவிட்டுள்ளதாவது:

“குற்றவாளிகள் சிலர் ‘சிறைச்சாலை எண் 17’க்கு போதைப்பொருள்களை விநியோகிக்க ஒரு பூனையைப் பயன்படுத்தியுள்ளனர். அச்சிறைச்சாலையின் ஊழியர்கள், அந்த விலங்கின் கழுத்தில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் அடங்கிய இரண்டு துணிப் பட்டைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.

மீசையுள்ள இந்தத் தூதுவர், சிறைக்குள் ரகசியமாக நுழைந்து கைதிகளுக்கு இந்தச் சட்டவிரோதப் பார்சலை வழங்க முயன்றுள்ளார். ஆனால், விழிப்புடன் இருந்த அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.

சேவை மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்த நிபுணர், பூனையின் கழுத்துப் பட்டையில் போதைப்பொருள் இருப்பதை உறுதிசெய்தார்.

தடைசெய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு, அந்தப் பூனை நலமுடன் இருப்பதை ஊழியர்கள் உறுதிசெய்து, பின்னர் அதனை விடுவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே பரிசோதிக்கப்பட்ட அந்தப் பூனைக்கு எந்தவிதக் காயங்களும் ஏற்படவில்லை என்றும், ஆரோக்கியமாக இருந்ததால் அது மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் அப்பூனை சிறைத் தண்டனையிலிருந்து நூலிழையில் தப்பியுள்ளது.

இருப்பினும், இந்த போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இருந்த நபர்கள் பற்றியோ அல்லது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் வகை குறித்தோ அதிகாரிகள் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

விலங்குகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட பிற சம்பவங்கள்:
கடந்த ஆண்டும் ‘கோஸ்டாரிகா’ (Costa Rica) நாட்டில், உடம்பில் ‘கிராக் கொக்கைன்’ (Crack cocaine) ஒட்டப்பட்ட நிலையில் சிறைக்குள் நுழைய முயன்ற பூனை ஒன்று அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டது.

அப்போது பூனையின் உடலில் கட்டப்பட்டிருந்த இரண்டு பாக்கெட்டுகளில் இருந்து 235 கிராம் கஞ்சா மற்றும் சுமார் 70 கிராம் எடையுள்ள ‘கிராக் கொக்கைன்’ பேஸ்ட் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அண்மையில், ‘பென் நெவிஸ்’ (Ben Nevis) மலைப்பாதையில் வீசப்பட்டிருந்த கஞ்சாவை உட்கொண்ட ‘டோக்கியோ’ (Tokyo) என்ற லேப்ரடார் ரக மோப்ப நாய் ஒன்று மீட்கப்பட்டது.

பிரித்தானியாவின் மிக உயரமான மலையில் தனது உரிமையாளர் கிறிஸ்டினா (Christina Bluhme) என்பவருடன் ஏறிக்கொண்டிருந்தபோது, அந்நாய் விசித்திரமாக நடந்து கொள்ளத் தொடங்கியது.

கடந்த வார இறுதியில், 4,413 அடி உயரமுள்ள பென் நெவிஸ் மலையின் பாதியை எட்டியபோது, டோக்கியோ மயங்கி விழுந்தது.

பயந்துபோன நாய் பயிற்சியாளரான கிறிஸ்டினா, உடனடியாக ‘லோச்சபர் மலை மீட்புக் குழுவை’ (Lochaber Mountain Rescue) தொடர்புகொண்டார். மீட்புக் குழுவினர் 55 கிலோ எடையுள்ள அந்நாய் குட்டையை ஸ்ட்ரெச்சரில் வைத்து பாதுகாப்பாகக் கீழே கொண்டு வந்தனர்.

இந்த ஆபத்தான சம்பவத்திற்குப் பிறகு, மறுநாளே டோக்கியோ பூரண குணமடைந்தது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button