பலதும் பத்தும்

கால்வாயின் மீது இலங்கையின் முதல் சூரிய மின் திட்டம்

இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது ‘Canal-Top Solar’ சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் வியானா கால்வாய் பகுதியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட பரந்த கால்வாயாக விளங்கும் வியானா கால்வாய், தேசிய மின்சார அமைப்பிற்கு அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்கும் திறனும், ஆண்டின் பெரும்பகுதியில் கிடைக்கும் போதிய சூரிய ஒளியும் உள்ளதால், இத்திட்டத்திற்கான இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கால்வாயின் மீது சூரிய மின்தகடுகள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம் நீர் ஆவியாவதை குறைத்தல், கடுமையான வெப்பமான காலநிலையிலும் நீரின் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைத்தல் மற்றும் எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜன் போன்ற மேம்பட்ட மின்சக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்குதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், திட்டத்தில் பாதுகாப்பான மின்சார யானை வேலியும் இணைக்கப்படவுள்ளதால், வனப்பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகள் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயத்தையும் குறைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்தத் திட்டம் நீரை எடுத்துச் செல்லும் கால்வாயாக மட்டுமல்லாமல், சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும், நீர்வளங்களையும் காட்டு யானைகளையும் பாதுகாக்கும், இலங்கையின் பசுமை மின்சக்தி கொள்கைக்கு புதிய திசையைக் காட்டும் தேசிய அளவிலான முன்னோடி அபிவிருத்தித் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைஉணவு தயாரிப்புகள்

இத்திட்டம் தொடர்பான விசேட கள விஜயமும் முன்னேற்ற மறுஆய்வுக் கலந்துரையாடலும் கடந்த 20ஆம் திகதி மஹியங்கனையில் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல மற்றும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் அலககோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button