வற்றிப்போன ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி

ருமேனியாவில் டான்யூப் ஆற்றின் நீர்மட்டம் 1996-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டிய நிலையில் வேளாண் மக்களுக்கு நீர்ப்பாசனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, கப்பல் போக்குவரத்தும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிப்பு
இந்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் உள்ள நீர்வழிகள் நீண்டகால வெப்ப அலைகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன; மேலும், திங்களன்று மேற்கு ஐரோப்பாவில் சராசரி உச்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இது ஜூலை 20ம் திகதிக்கான இயல்பான அதிகபட்ச வெப்பநிலையை விட 2.7 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில் ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி ருமேனியாவுக்குள் நுழையும் இடத்தில், ஞாயிற்றுக்கிழமையன்று நீரின் அளவு வினாடிக்கு 1,700 கன மீற்றராக இருந்ததாக அந்நாட்டின் அரசு நீர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது; ஜூலை மாதத்திற்கான சராசரி அளவு வினாடிக்கு 4,700 கன மீற்றராகும்.
அண்டை நாடான பல்கேரியாவுடனான எல்லைக்கு அருகிலுள்ள கரைகளில் நீண்ட தூரத்திற்கு மணல் திட்டுக் காணபப்டுவதையும், பல படகு சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதையும், தானியப் படகுகள் சேவை இல்லாமல் நின்றுகொண்டிருப்பதையும் ராய்ட்டர்ஸ் காணொளிக் காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதனிடையே, தென்கிழக்கு ருமேனியாவில் பயிர் நீர்ப்பாசனத்திற்காக வேளாண் மக்கள் தண்ணீர் பெறுவதை அதிகாரிகள் கட்டுப்படுத்தியதோடு, அரசுக்குச் சொந்தமான அணுமின் உற்பத்தியாளரான நியூக்ளியர் எலக்ட்ரிகாவின் இரண்டு அணு உலைகளைக் குளிர்விக்கத் தேவையான குறைந்தபட்ச நீர் அளவை உறுதி செய்வதற்காக நீர்த்தேக்கங்களையும் கட்டுப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பல மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக, திங்கட்கிழமை முதல் டான்யூப் நதியின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக நீர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
![]()