கவிதைகள்

அம்மனது அருள்நிறைந்த மாதமதே ஆடி !… கவிதை… ஜெயராமசர்மா

பண்டிகை அனைத்தும் பண்பாட்டைக் காட்டும்
பக்தியும் பக்குவமும் அதுவுணர்த்தி நிற்கும்
வருடத்தில் வருகின்ற பண்டிகை அனைத்தும்
மக்களது வாழ்வியலில் முக்கியமே ஆகும்

வருடத் தொடக்கத்தை கொண்டாடி மகிழ்வார்
அரைவருடம் முடிந்ததும் ஆடிவந் தமையும்
ஆடிப் பிறப்பை அகமிருத்தி அனைவருமே
அரைவருடத் தொடக்கத்தை விழாவாக்கி மகிழ்வார்

ஆதவன் தெற்குத்திசை அடிவைத்து நிற்பான்
அவன் வெப்பந்தணிந்து குளிர்ச்சியங்கே அமரும்
மக்களும் மகிழ்வர் கொண்டாட்டம் தொடங்கும்
ஆடிப் பிறப்பங்கு ஆனந்தம் கொடுக்கும்

அம்மனுக்கு விழாவெடுத்து அனைவருமே மகிழ்வார்
ஆடியிலே கூழ்காய்ச்சி அம்மனுக்குப் படைப்பர்
ஊரெல்லாம் கூடும் உறவுகளும் சேரும்
கூழுண்டு மகிழ்வர் கொண்டாட்டம் பெருகும்

ஆடியிலே வருகின்ற செவ்வாயும் சிறப்பு
ஆடியிலே வருகின்ற வெள்ளியும் சிறப்பு
ஆடிப்பூரம் சிறப்பு அனைத்துமே சிறப்பு
பீடைமிக்க ஆடியல்ல பீடுடைய ஆடியே

அபொழுது ஈழத்தில் ஆடிக்கு விடுதலை
இப்பொழுது விடுதலையை எடுத்தெறிந்து விட்டார்
என்றாலும் ஆடிக்கூழ் அம்மனுக்குப் படைத்து
இல்லாத விடுதலையைப் பொய்யாக்கி விட்டார்

பட்டம் விடுவார்கள் பலபேரும் மகிழ்வார்
பனங்கட்டி பயறோடு கூழ்காய்சிச் சுவைப்பார்கள்
கொழுக்கட்டை அவிப்பார்கள் கொண்டாடி மகிழ்வார்கள்
மக்களது மனமெல்லாம் ஆடியே அமர்ந்திருக்கும்

மாடியிலே இருப்பாரும் கூழ்காய்ச்சி மகிழ்வார்
மண்குடிசை இருப்பாரும் கூழ்காய்ச்சி மகிழ்வார்
ஆடியெனும் மாதமது அமங்கலமே அல்ல
அம்மனது அருள்நிறைந்த மாதமதே ஆடி !

Screenshot

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button