அடர்ந்த காட்டைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்த பாத யாத்திரை பக்தர்கள்

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் நேற்று புதன்கிழமை அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்துள்ளனர்.நேற்றைய தினம் கதிர்காமத் திருத்தல வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் ஆடிவேல் விழாவை முன்னிட்டு, கடந்த 10 ஆம் திகதி உகந்தை மற்றும் குமண தேசிய பூங்காவிலிருந்து யாழ ஓடா ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டிருந்தது.
முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய இப்பாதயாத்திரைக் குழுவினர், அடர்ந்த கானகம், மேடு, சேறுகள் மற்றும் முட்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளையும், கிரவல் மண் பாதைகளையும் கடந்து தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்துள்ளனர்.
வனமுறை வேடன் அருளிய பாரம்பரிய பூஜை முறைகளைப் பின்பற்றி, கானகத்திலும் வழிபாடுகளை முன்னெடுத்து வந்த பக்தர்கள் நேற்று கதிர்காமம் ஆலயத்தை வந்தடைந்ததும் பக்தி பரவசத்துடன் கூட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, இவ்வாண்டிற்கான ஆடி வேல் விழா மங்களகரமாக நிறைவுபெறவுள்ளது.
![]()