முச்சந்தி

நீர்கொழும்புச் சிறைச்சாலை வன்முறை துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி இடமாற்றம்

நீர்கொழும்பு சிறையில் வெடித்த வன்முறை மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, உடனடியாகப் பல்லேகல சிறைக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைகள் ஆணையர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கேள்விக்குட்படுத்தப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிமுறைகளுக்கு இணங்க நடத்தப்பட்டதா அல்லது அதிகார மீறலா என்பதைத் தீர்மானிப்பதற்காக ஒரு சிறப்பு விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், கைதிகள் குழு ஒன்று அங்கு இருந்த அதிகாரிகளைக் கொடூரமாகத் தாக்கி, சிறையின் கடைசி மரக்கதவை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

பத்து சிறை அதிகாரிகள் உட்பட 33 பேர் உயிரிழந்த இந்த வன்முறை மோதலின் போது, கலவரத்தில் ஈடுபட்ட பல கைதிகளைப் பணயக்கைதிகளாகப் பிடித்திருந்த சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரி தனது துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

சிறையின் பிரதான வாயிலை மறித்துக்கொண்டு தப்பிக்க முயன்ற கைதிகள் மீது, அதிகாரி பிரதான வாயில் வழியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் கைதிகள் பீதியடைந்து தப்பி ஓடினர்.

பின்னர், சிறை அதிகாரிகளும் சிறப்பு பொலிஸ்அதிரடிப் படையினரும் வாயில்களைத் திறந்து, பணயக்கைதிகளையும் காயமடைந்த கைதிகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

சிறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தன் உயிரைப் பணயம் வைத்த இந்த அதிகாரி, துபாய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் பாதாள உலகக் கும்பல்களிடமிருந்து தற்போது தொடர்ச்சியான மரண அச்சுறுத்தல்களைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட சக அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வெலிக்கடை சிறைக்கு வந்த நீதி மற்றும் சிறைகள் விவகாரங்கள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைச் சூழ்ந்துகொண்ட சிறை அதிகாரிகள், பாதாள உலகத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த அதிகாரியின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒருமனதாகக் கோரிக்கை விடுத்ததும் தெரிந்ததே .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button