தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியில் குற்றவாளிகள்!; நாளை கம்பி எண்ணும் நிலை வரும் என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது அங்கு வருகை தந்த அமைச்சரிடம், தமிழ் முஸ்லீம் கட்சிகளின் புதிய கூட்டு தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி என்பது, அது வெறும் கூட்டு சாம்பாராக மாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இடமில்லை என்பது மக்களுக்கு தெரிந்த விடயம்.
இந்தக் கூட்டணி இந்த நாட்டில் இலஞ்சத்தை ஒழிப்பதற்காக, மோசடிகளை ஒழிப்பதற்காக திருடர்களைப் பிடிப்பதற்காக, இதுபோன்ற நல்ல வேலைகளைச் செய்வதற்கான கூட்டணியா? அல்லது திருடர்களைப் பாதுகாப்பதற்கும், வஞ்சகர்களைப் பாதுகாப்பதற்கும், ஊழல் மோசடிகளை செய்பவர்களை பாதுகாப்பதற்கான கூட்டணியா என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
இந்தக் கூட்டணியில் கூடியிருக்கின்ற தமிழ்க் கட்சிகள் என்றாலும் சரி, முஸ்லிம் கட்சிகள் என்றாலும் சரி அவர்களுடைய பட்டியலைத் திறந்து பாருங்கள். அனைவரும் குற்றவாளிகள்! அனைவருமே இன்றைக்குத் தங்களுடைய கடந்த கால வரலாற்றின் ஊடாகக் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் தான். நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு இன்றைக்குப் பிணையில் இருக்கின்றவர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள்.
அவ்வாறு பிணையில் இருக்கிறவர்களுக்கு நாளைக்கு கம்பி எண்ணுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும், அதனால், சிறைக்குச் செல்வதற்கு முதல்எதையாவது செய்து இந்த அரசாங்கத்தை வீழ்த்தலாமா, அல்லது அரசாங்கத்தை மாற்றலாமா என்கிற முயற்சியில் ஈடுபடுகின்ற ஒரு போக்காகவே இதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தக் கூட்டணி என்பது மக்களைக் குட்டிச்சுவராக்குகின்ற கூட்டணியாகும். மக்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அல்ல.
எந்த வகையிலும் இவ்வாறான கூட்டணி அல்ல, இதனுடைய அப்பனால் அமைக்கப்படுகின்ற கூட்டணியாலும், தேசிய மக்கள் சக்தியை அசைக்க முடியாது. ஏனென்றால், இன்றும் அவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றோம். மக்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். இந்தக் குட்டிச்சுவரான கூட்டணியை மக்கள் திரும்பியும் பார்க்க மாட்டார்கள், மக்கள் செவிமடுக்க மாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், இவ்வாறான கூட்டணிகள், இவ்வாறான குட்டிச்சுவரான நடவடிக்கைகளை ஈடுபடுவதைத் தவிர வேறு வேலைகள் இல்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும் – என்றார்.
![]()