இலங்கை

பிள்ளையான், சலேயின் கைதால் ஜி.எஸ்.பி.+ க்கு பாதிப்பு வரலாம்;  கலங்குகிறார் முன்னாள் அமைச்சர் பந்துல

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது இலங்கைக்கு பொருளாதார ரீதியாக ஆபத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சுரேஷ் சலே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஜி.எஸ்.பி.+ (GSP+ ) வர்த்தக சலுகைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

இலங்கையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனி நபர்கள் தடுத்து வைக்கப்படும் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகின்றது.

இத்தகைய விவகாரங்களை மனித உரிமைகள் என்ற கண்ணோட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானிக்கின்றது.

இந்த நிலையில், பிள்ளையான் மற்றும் சலே ஆகியோரின் தொடர்ச்சியான தடுப்புக் காவலும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் மரணங்களும், ஜி.எஸ்.பி.+ சலுகைக்கு இலங்கை தகுதியானதா என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்பீட்டை பாதிக்கக் கூடும்.

இந்த சலுகையை இழப்பது, ஐரோப்பிய சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் மீது, 5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் வரிகளை விதிக்க வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button