இலங்கை

நிதிப் பிரச்சினை இல்லை ; மாகாண சபை தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்த தயார்

புதிய தேர்தல் முறைமை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டவுடன், மாகாண சபை தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. இதற்காக நிதிப் பற்றாக்குறை எதுவும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (14) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே எங்களது பிரதான எதிர்பார்ப்பாகும். எனினும், தேர்தல் என்பது மக்களின் உண்மையான விருப்பை பிரதிபலிக்கும் ஒன்றாக அமைய வேண்டும். இலங்கை மக்கள் நீண்டகாலமாகவே, தங்களுக்குப் பழக்கமான விருப்பு வாக்கு முறைமையை ஒழித்து, தங்கள் தொகுதிக்கு பொறுப்பான ஒரு மக்கள் பிரதிநிதியை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறைமையையே எதிர்பார்த்திருந்தனர். இதற்கமையவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக இத்தகையதொரு புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு, அதன்படி தேர்தல்களும் நடத்தப்பட்டன.

புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், மக்கள் தங்களது தொகுதிக்கான பிரதிநிதியை நேரடியாக அடையாளம் காணக்கூடியதாக இருந்ததுடன், பழைய தேர்தல் முறைமைகளில் காணப்பட்ட தேவையற்ற விருப்பு வாக்கு மோதல்களும் முற்றாக ஒழிக்கப்பட்டன. அத்துடன், தேர்தல் பிரச்சாரங்களுக்கான செலவுகளும் கணிசமாகக் குறைந்தன. அதேவேளை, பெண்களுக்கான பிரதிநிதித்துவமும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதேபோன்று, விருப்பு வாக்கு முறைமையற்ற, தொகுதி ரீதியில் மக்கள் பிரதிநிதிகளைப் பெற்றுத்தரும் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் புதிய தேர்தல் முறைமையே மாகாணசபைகளுக்காகவும் முன்மொழியப்பட்டது. மக்களின் இந்த விருப்பங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டுப் பழைய தேர்தல் முறைமைக்கு நாம் திரும்ப முடியாது.

எனவே, இந்த புதிய தேர்தல் முறைமை தொடர்பான பணிகளை நாம் பாராளுமன்றக் குழு ஒன்றிடம் ஒப்படைத்துள்ளோம். இக்குழு கூடி, மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமையின் கீழ் எல்லை நிர்ணயப் பணிகளை நிறைவு செய்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இது அங்கீகரிக்கப்பட்டவுடன் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.

மாகாண சபைகளின் நிர்வாகத்தை வெறுமனே ஆளுநர்களும், பிரதம செயலாளர்களும் மாத்திரம் கொண்டு நடத்த முடியாது. மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளின் பெரும்பாலான நிறுவனங்கள் மாகாண சபைகளின் கீழேயே நிர்வகிக்கப்படுகின்றன. எனவே, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட அனைத்துக் தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த தேர்தல் முறைமையை விரைவாக தயாரித்து வழங்க வேண்டும்.

அரசாங்கத்திடம் தேர்தலை நடத்துவதற்குப் பணம் இல்லை எனச் சில தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களை நாம் முழுமையாக மறுக்கிறோம். அரசாங்கத்திற்கு எவ்வித நிதிப் பிரச்சினையும் இல்லை. திடீரென ஒரு பொதுத் தேர்தல் நடத்த நேரிட்டாலும், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதுடன், அதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.இலங்கை வணிகம்

தித்வா நிவாரண உதவிகளுக்காக நாம் 500 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். அதில் இதுவரை 250 முதல் 260 பில்லியன் ரூபா வரையிலேயே செலவிடப்பட்டுள்ளது. மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அதிகபட்சமாக 10 முதல் 15 பில்லியன் ரூபா மாத்திரமே தேவைப்படும். எனவே, தேர்தலை நடத்துவதில் எவ்வித நிதித் தட்டுப்பாடும் இல்லை. பாராளுமன்றத்தில் புதிய தேர்தல் முறைமை அங்கீகரிக்கப்பட்ட மறுக்கணமே தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button