இலங்கை

மஹிந்த, நாமல் மீது அவதூறு பரப்புவது அரசாங்கமும் புலிகள் சார்பு குழுக்களுமே; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர். மஹிந்த, நாமல் மீது அவதூறாக பழிசுமத்துவது அரசாங்கமும் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்களுமே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றம் சாட்டியுள்ளார்.

அவதூறுகளுக்கு எதிராக திங்கட்கிழமை (13) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் நாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தோம். நாமல் ராஜபக்ஷவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஒரு பொய்ப் பிரசாரம் கொண்டு செல்லப்படுகிறது. நான் அது குறித்த மேலதிக விபரங்களை இந்தத் தருணத்தில் கூறப்போவதில்லை. ஏனெனில், ஒருபுறம் அது அவசியமற்ற பிரசாரத்துக்கு வழிவகுக்கும், மறுபுறம் நாம் இன்று கையளித்த முறைப்பாட்டின் விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி திட்டமிட்ட முறையில் இரு பிரதான தரப்பினரே அவதூறான பழிசுமத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதலாவது தரப்பினர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குச் சார்பான முகாம்களாகும். மாலிமாவைக் கேந்திரமாகக் கொண்டு இயங்கும் சமூக ஊடக கணக்குகள் மூலமே இந்தத் திட்டமிட்ட பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

அடுத்ததாக, சமூக ஊடகங்கள் ஊடாகத் தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து, பிரிவினைவாதக் கருத்துக்களைப் பரப்பும் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்களும் இதே பொய்ப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. குற்றவியல் ஆய்வுகளின்படி, கொலை செய்தல், அச்சுறுத்திப் பணம் பறித்தல், கொள்ளையடித்தல், கடத்தல், சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவையே பாதாள உலகக் குழுக்களின் பிரதான செயற்பாடுகளாகும். எமக்குச் சேறுபூசும் இந்த இரு தரப்பினரின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அவர்கள் இந்த அனைத்துக் குற்றங்களிலும் ஈடுபட்டதற்கான சான்றுகள் இந்நாட்டு வரலாற்றில் பதிவாகியுள்ளன.

அரசாங்கத் தரப்பினர் போதைப்பொருள் ஒழிப்புப் பற்றிக் பேசினாலும், கடந்த ஒன்றரை வருட காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் போதைப்பொருள் விவகாரங்களில் சிக்கிக் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இந்நாட்டில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளிட்ட அனைத்துப் பாதாள உலகக் குற்றச் செயல்களும் முழுமையாக அடக்கப்பட்டன என்பதே உண்மையான வரலாறாகும். முகநூல் போலி கணக்குகள் மூலமோ அல்லது பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டோ கூச்சலிடாமல், தைரியமிருந்தால் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button