உலகம்

சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி; 13 உலகத் தலைவர்களுக்கு ஈரான் பகிரங்க மரண எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மரணத்திற்குப் பழிவாங்கக் கோரி ஈரானில் தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து வரும் வேளையில் இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ‘ஹம்ஷஹ்ரி’ (Hamshahri) நாளிதழ், தனது இணையப் பக்கத்திலும் அச்சுப் பதிப்பிலும் ஒரு அதிரடி தகவல் வரைபடத்தை (Infographic) வெளியிட்டுள்ளது.

அதில், “பழிவாங்கல் மிக விரைவில் வருகிறது; இது எங்களது தேசத்தின் விருப்பம், இது நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்ற மிக ஆக்ரோஷமான வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த மரணப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முக்கிய ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.

ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்குப் பிறகு வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ செய்தியில், “இந்தக் குற்றவாளிகள் யாரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட முடியாது அவர்கள் தங்களது இறுதி நாட்களைக் கல்லறையில்தான் கழிக்க நேரிடும்” என ஆளுமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் அனைத்தும் “இரத்தப் பழிவாங்கலின் வெள்ளிக்கிழமைகளாக” மாற்றப்பட்டு, அமெரிக்காவிற்கு எதிரான ஜிகாத் (Jihad) முழக்கங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரானின் 140-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்திக் குண்டுமழை பொழிந்துள்ளது.

“ஈரான் எங்களது தலைவர்களைக் குறிவைக்க முயன்றால் அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதால், வளைகுடாப் பகுதியில் எந்நேரமும் முழு அளவிலான உலகப்போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button