துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்; மக்களுக்கு என்ன பயன்? – சாணக்கியன் கேள்வி

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மாத சம்பளமாக 10 இலட்சம் முதல் 12 இலட்சம் ரூபா வரை வழங்கப்படுகிறது.இந்தளவுக்கு சம்பளம் வழங்கும் நிலையில் துறைமுக நகரில் இருந்து வருமானமும், முதலீடுகளும் கிடைக்கப்பெறுகிறதா? நாமல் ராஜபக்ஷ கொழும்பு துறைமுக நகரம் சென்று உடற்பயிற்சி செய்கிறார், மணல் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுகிறார்.இதை தவிர அங்கு ஒன்றும் நடப்பதில்லை. மக்களுக்கும் ஏதும் கிடைப்பதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை இருபத்தேழின் கீழ் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நிதியமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கொழும்பு துறைமுக நகரம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டையும் 80,000 இற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் கொண்டு வரும் என உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், போதிய வாய்ப்புகள் மற்றும் முதலீடுகள் இல்லாததால் பெருமளவிலான இளம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த வலயத்தின் சந்தைப்படுத்தக் கூடிய 178 ஹெக்டயர் நிலத்தில், 116 ஹெக்டயர் நிலம் 99 வருட குத்தகை அடிப்படையில் சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் துணை நிறுவனமான போர்ட் சிட்டி கொழும்பு லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனமே அந்த நிலத்தை சந்தைப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துக்கொள்கிறது. இந்த வலயம் ‘வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு எவ்வித வரம்பும் இல்லை’ என்ற வாசகத்துடன் வெளிநாடுகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது. 2026 ஏப்ரலில், அமைச்சரவையானது இந்த வலயத்திற்காக 77 ‘பல்நோக்கு முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு அனுமதியளித்துள்ளது.
போர்ட் சிட்டி கொழும்பு லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட 116 ஹெக்டேயர் நிலத்தில், இன்றுவரை எவ்வளவு நிலம் துணைக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது அல்லது வேறு வழிகளில் மாற்றப்பட்டுள்ளது? இந்த முதலீட்டாளர்களின் பட்டியல், அவர்களின் நாட்டின் உரிமையாளர் விபரம் மற்றும் ஒவ்வொரு குத்தகையின் கால அளவு ஆகியவற்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமா? மேலும், மொத்தமாக இந்த நிலத்தில் எவ்வளவு விகிதம் இலங்கையை தளமாகக் கொண்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது?
போர்ட் சிட்டி கொழும்பு லிமிடெட் நிறுவனம் இந்த வலயத்தில் நிலத்தை சந்தைப்படுத்தியதன் மூலம் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில், அரசாங்கம் இதுவரை போர்ட் சிட்டியிலிருந்து எவ்வளவு வருமானத்தை ஈட்டியுள்ளது?
கடந்த ஐந்து ஆண்டுகளில், கொழும்பு துறைமுக நகரம்,முதலீட்டு சபை மற்றும் ஏனைய வழிகளின் ஊடாகவும் உண்மையில் பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடு எவ்வளவு ?
கொழும்பு துறைமுக நகரில் எத்தனை பேர் இதுவரையில் பணிபுரிகிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் இலங்கை பிரஜைகள், எத்தனை பேர் 35 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் எத்தனை பேர் வெளிநாட்டு பிரஜைகள்? கடந்த ஐந்து வருடங்களாக, முதலீட்டு சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஆகியவற்றின் சம்பளம், ஊதியம் மற்றும் மூலதனச் செலவு உள்ளிட்ட மொத்தச் செலவுகள், அவற்றின் உண்மை வருமானம் மற்றும் திறைசேரி நிதி ஒதுக்கீடு ஆகியவற்றைத் தனித்தனியாக எவ்வளவு?
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மாத சம்பளமாக 10 இலட்சம் முதல் 12 இலட்சம் ரூபா வரை வழங்கப்படுகிறது.இந்தளவுக்கு சம்பளம் வழங்கும் நிலையில் துறைமுக நகரில் இருந்து வருமானமும்இமுதலீடுகளும் கிடைக்கப்பெறுகிறதா ? நாமல் ராஜபக்ஷ கொழும்பு துறைமுக நகரம் சென்று உடற்பயிற்சி செய்கிறார், மணல் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுகிறார்.இதை தவிர அங்கு ஒன்றும் நடப்பதில்லை.மக்களுக்கும் ஏதும் கிடைப்பதில்லை என்றார்.
![]()