பலதும் பத்தும்

பிரான்ஸ் மீண்டும் மொரோக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் விறுவிறுப்பான கால்இறுதிப் போட்டியில், மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு கெத்தாக நுழைந்துள்ளது.

கடந்த 2022 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் மொரோக்கோவை வீழ்த்திய பிரான்ஸ், இந்த முறையும் அதே வெற்றியை மீண்டும் பதிவு செய்துள்ளது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. தொடர்ந்து நடுகளத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணிக்கு, ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) முதல் கோலை அடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து 66-வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பேலே (Ousmane Dembélé) மற்றொரு அபாரமான கோலை அடிக்க, பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

பதிலடி கொடுக்க மொரோக்கோ அணி மேற்கொண்ட தீவிர முயற்சிகளை பிரான்சின் பலமான தடுப்பாட்டம் முறியடித்தது. ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் 2-0 என வெற்றி பெற்றது.

இப்போட்டியில் அடித்த கோலின் மூலம், உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் (12 கோல்கள்) அடித்த கால்பந்து வீரர் என்ற புதிய உலக சாதனையை கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.

மேலும், இந்த நடப்புத் தொடரில் 8 கோல்களுடன் லியோனல் மெஸ்ஸியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மொரோக்கோ அணியின் உலகக் கிண்ண கனவு இந்த கால்இறுதியுடன் முடிவுக்கு வந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button