கவிதைகள்

யார் மறவன் என்றறி ஏந்திழையே!… கவிதை…. சங்கர சுப்பிரமணியன்

வலிய முதலையின் வலிமையும்
வற்றாது கிடக்கும் நீரில் மட்டுமே
வலிமையுள்ள சிங்கத்தின் வீரமும்
வனமாம் அதன் உறைவிடத்திலே

நீர்வற்றிய இடத்தில் முதலையும்
ஊர்பார்க்க கூண்டின் சிங்கமும்
வலிமையை கொண்டிருப்பினும்
நிலைமையோ நிர்க்கதி ஆக்கும்

தன்னைச் சார்ந்தவர் சூழ்ந்தவிடத்து
தனிப்பெருமை கொள்வதிலா சிறப்பு
தன்னைச்சாரார் சேர்ந்திடாவிடத்து
தனியாளாய் வலம்வருவதே சிறப்பு

ஆயிரம் படைகள் சூழ்ந்திட்ட போதும்
ஆங்கொருவன் தனித்து நின்றது வீரமா
தம்படை சூழ்ந்து அரணாய் நிற்கையில்
தனித்தவனிடம் காட்டுவதுதான் வீரமா

இனத்திலே ஒன்றாய் தோன்றிடினும்
மார்மீது அம்பை ஏந்தியவனே மறவன்
மாற்றாக தன்னினத்தான் தூற்றிடினும்
ஏற்றிணைத்து பயணிப்பவனே மறவன்!

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button