மெக்சிகோவில் பெரும் துயரத்தில் முடிந்த கால்பந்து வெற்றி கொண்டாட்டம் ; பறிபோன உயிர்கள்

காற்பந்து கிண்ணத் தொடரின் 32 அணிகளுக்கான சுற்றில் மெக்சிகோ அணி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, மெக்சிகோ சிட்டியில் (Mexico City) கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 வயது யுவதி உட்பட மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈக்வடோர் அணிக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தலைநகரில் பெருமளவிலான மக்கள் வீதிகளில் திரண்டபோதே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

உயிரிழந்த ஏனைய இருவர் 48 வயதுடைய பெண் மற்றும் 44 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தலைநகரின் சுகாதாரப் பிரிவு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
1986 ஆம் ஆண்டிற்குப் பிறகு மெக்சிகோ அணி உலகக் கிண்ண நொக்-அவுட் (Knockout) சுற்றொன்றில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து, மெக்சிகோ நகரின் மையப்பகுதியிலுள்ள புகழ்பெற்ற ‘ஏஞ்சல் ஒஃப் இண்டிபென்டன்ஸ்’ நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாத்திரம் பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
கொண்டாட்டங்களின் போது மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மூவருக்கும் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
![]()