பலதும் பத்தும்

கோமியம் மூலம் சிக்குன்குனியாவுக்கு முற்றுப்புள்ளி?

பலகட்டங்களாக சுத்திகரிக்கப்பட்ட கோமியம் அடங்கிய ஆயுர்வேத கலவை சிக்குன்குனியாவைத் தடுக்கும் புதிய மருந்தாக செயல்படுவதாக ரூர்கே ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர்.

ஏ.டி.எஸ். எனப்படும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் ஏற்படும் சிக்குன்குனியா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 7 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகள் தென்படும். கடுமையான மூட்டுவலி, காய்ச்சல், தலை மற்றும் தசைவலி, தோல்தடிப்புகள், அதிகப்படியான சோர்வு என அறிகுறிகளை உணர முடியும்.

இன்னும் இந்த வைரசை அழிப்பதற்கான பிரத்தியேக மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால் அறிகுறிகளை குறைப்பதற்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிக்குன்குனியா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்த ரூர்கேலா ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், ஒரு ஆயுர்வேத கலவைகள் அந்த வைரசுக்கு எதிராக செயல்படுவதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். ரூர்கேலா ஐ.ஐ.டி.யின் உயிரி அறிவியல் மற்றும் உயிரி என்ஜினியரிங் துறை பேராசிரியர் ஷைலி தோமர் தலைமையிலான குழுவினர். ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவோடு இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.

ஆய்வக சோதனையில் சிக்குன்குளியா வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களுக்கு பல கட்டங்களாக வடிகட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, தரப்படுத்தப்பட்ட கோமியம், இயற்கை மூலக்கூறுகளான கருஞ்சீரகத்தில் எடுக்கப்பட்ட தைமோகுவினோன், மிளகில் இருந்து எடுக்கப்பட்ட பைப்பரின் ஆகியவை அடங்கிய ஆயுர்வேத கலவைகளை கொடுத்து சோதித்திருக்கின்றனர். அந்த சோதனை முடிவில் வைரசின் தாக்கம் 99.85 சதவீதம் வரை குறைந்தது கண்டறியப்பட்டிருக்கிறது.

அதுவே வடிகட்டப்பட்ட கோமியத்தை மட்டும் வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில் சோதித்த போது 90 சதவீதம் மேல் வைரசின் அளவு குறைந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆயுர்வேத கலவைகள் சிக்குன்குனியா வைரஸ் நம் உடலின் செல்களுக்குள் நுழைந்து தன்னைத்தானே பெருக்கிக் கொள்ள பயன்படுத்தும் முக்கியமான புரதங்களை முடக்குகின்றன. வைரசின் இந்த இனப்பெருக்கச் சங்கிலி உடைக்கப்படுவதால், பாதிப்பு மிக வேகமாகத் தடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி இன்னும் மனிதர்களிடமோ அல்லது விலங்குகளிடமோ சோதித்துப் பார்க்கப்படவில்லை. ஆய்வகத்தில் உள்ள சோதனைக் குழாய்களிலும், வளர்ப்புச் செல்க ளிலும் மட்டுமே இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் சிக்குன்குளியா நோய்க்கு ஒரு பாதுகாப்பான, பக்கவிளைவுகளற்ற இயற்கை மருந்து சந்தைக்கு வர வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாக பேசப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button