முச்சந்தி

டொலர் உயர்வால் பொருளாதார வீழ்ச்சி சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம் அவசியம் திஸ்ஸ அத்தநாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 291 ஆக காணப்பட்ட போதிலும், இன்று அது 340 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், குறுகிய காலத்திற்குள் டொலரின் வித்தியாசம் 48 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இலங்கை இறக்குமதியை நம்பியிருக்கும் ஒரு நாடு என்பதால், டொலர் மதிப்பின் இந்த அதீத உயர்வு நாட்டுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், எரிபொருள், மருந்து, உணவு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலைகளும் இதனால் கடுமையாக உயர்ந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது மறுஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றும், அதில் இலங்கையின் கடன் செலுத்தும் திறன் மற்றும் இறக்குமதிக்கான நிதித் திறன் ஆகிய இரு முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

எனினும், இந்த இரு பிரச்சினைகளையும் கையாள்வதற்கான எவ்வித மூலோபாய திட்டமும் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்ற கேள்வி எழுவதாகக் குறிப்பிட்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளின்படி இலங்கை வைத்திருக்க வேண்டிய கையிருப்பு 8.6 பில்லியன் டொலர்களாக இருக்க வேண்டும் என்ற போதிலும், தற்போது 6.8 பில்லியன் டொலர்களே காணப்படுவதாக பதிவாகியுள்ளது என்றார். இதன்படி வெளிநாட்டு கையிருப்பு பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது என்றும், 2028 ஆம் ஆண்டில் கடன் மறுசெலுத்தலை ஆரம்பிக்கும் போது நாணய நிதியத்தின் திட்டங்களின்படி வைத்திருக்க வேண்டிய 14 பில்லியன் டொலர் கையிருப்பில், தற்போது 1.8 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டும் கடன் மறுசீரமைப்பு மற்றும் இறக்குமதிக்கான டொலர் கையிருப்பு பலப்படுத்தப்படாத பட்சத்தில் நாட்டுக்கு என்ன நடக்கும் என்ற பாரிய கேள்வியும் தீவிர அரசியல் மற்றும் பொருளாதார அவமதிப்பும் எழுந்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்குப் புறம்பாக செயற்பட்டால் அவர்களின் ஆதரவைத் தொடர்ந்தும் பெற முடியுமா என்ற கேள்வி எழுவதாகவும், நாணய நிதியத்தின் இலக்குகள் எட்டப்படாததால் அவர்களுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் பலமுறை சுட்டிக்காட்டியதைப்போல, சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கையொன்றுக்கு அரசாங்கம் செல்ல வேண்டும் எனத் தெரிவித்த அவர், உலக நெருக்கடிகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகளைப் பேசிய மாத்திரத்திலேயே இந்த ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை விலகிவிட முடியாது என்றும், எனவே நாட்டுக்கு பொருத்தமான வகையில் புதிய உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொள்ளாவிடின் 2028 இல் இலக்குகளை அடைய முடியாமல் இலங்கை நாணய நிதியத்தின் திட்டங்களில் இருந்து வெளியேற நேரிடும் பாரிய ஆபத்து உள்ளதாகவும் எச்சரித்தார்.

இதேவேளை, நாட்டு மக்கள் எதிர்பாராத வகையில் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அரசாங்கம் அரிசி விலையைக் கூட கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகவும் அவர் சாடினார். தற்போதைய அரசாங்கம் இக்காலப்பகுதிக்குள் 1,885 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுள்ள போதிலும், மக்களுக்கான எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், மாறாக பொருளாதார சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இடம்பெயர்ந்த பலர் இன்னும் முகாம்களிலேயே வாழ்வதாகவும், புயலை காட்டி அரசாங்கம் பெருமளவு நிதியை திரட்டிய போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்ப அரசாங்கம் தவறியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகளை அமைத்துக் கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறுபுறம், எரிபொருள் மானியங்களை இனி வழங்க முடியாது என திறைசேரி அறிவித்துள்ளதால் அந்த சுமை மக்கள் மீது திணிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, மத்திய கிழக்கு போர்ச் சூழல் தணிந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை என்றார். முன்னர் விலை சூத்திரம் தேவையலை எனக் கூறிய அரசாங்கம், தற்போது விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளதாகவும், எரிபொருட்களின் மீது இன்னும் அதிக வரி வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச ஊடகங்களின்படி மத்திய கிழக்கு போர் முடிவுக்கு வந்துள்ளதால், வரும் ஜூலை மாதத்தில் எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் அரசியலமைப்பை மீறி, நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்பாமல் தனக்கு சாதகமானவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், தணிக்கையாளர் நாயகம் பதவிக்கும் ஜனாதிபதி தனக்கு நெருக்கமான ஒருவரை நியமிக்க முயன்றதாகவும், அரசாங்கம் அரசியலமைப்பை மீறாமல் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணிநீக்கம் தன்னிச்சையானது என மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மூலம் தனது அரசியல் வழிகாட்டலில் தன்னிச்சையான கைதுகளை முன்னெடுத்து வருவதாகவும், இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் எதிர்காலத்தில் பதில் சொல்ல வேண்டி வரும் என்றும் எச்சரித்தார்.

இறுதியாக, மாகாண சபை தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்திவைத்து வருவதாகவும், இது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்தார். பழைய விகிதாசார முறையின் கீழ் ஒரே நாளில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்ட தடைகளை நீக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும், தமது கட்சி தேர்தலுக்கு முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு தேவைக்கு பயன்படுத்த முடியாது என்பதால், அரசாங்கம் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களைக் கூறி தேர்தலை எதிர்கொள்ள பயந்து ஓடக் கூடாது என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button