உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தும் இலங்கையில் அதிகரிப்பு: பின்னணியில் பாரிய ஊழல்!; கம்மன்பில குற்றச்சாட்டு

உலக சந்தையில் எரிபொருள் விலை 26 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நடவடிக்கை முற்றிலும் அபத்தனமானது மற்றும் அநீதியானது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எலுல்கோட்டையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டில் விலை உயர்த்தப்பட்டதை புரிந்து கொள்ள முடிந்தாலும், தற்போதைய விலை அதிகரிப்பு எந்த வகையிலும் நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி உலக சந்தையில் 114 டொலராக காணப்பட்ட பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை, மே 29ஆம் திகதியளவில் 84 டொலர் வரை, அதாவது 30 டொலரால் (26%) வீழ்ச்சியடைந்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்த விலைக்குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்கி வரும் நிலையில், இலங்கையில் மாத்திரம் தலைகீழாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் விலை கூடினாலும் உள்நாட்டில் விலை அதிகரிக்கும், உலக சந்தையில் விலை குறைந்தாலும் உள்நாட்டில் விலை அதிகரிக்கும் ஒரு விசித்திரமான விலை சூத்திரமே இலங்கையில் நடைமுறையில் உள்ளதாக அவர் சாடினார்.
இலங்கை தனக்கான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை மத்திய கிழக்கிலிருந்து அல்லாமல் சிங்கப்பூரிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இதனால் செங்கடல் அல்லது ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமான கூடுதல் காப்புறுதி கட்டணங்கள் இலங்கைக்குப் பொருந்தாது.
இவ்வாறான பின்னணியில், உலகிலேயே மிக அதிக விலைக்கு டீசலை இலங்கை கொள்வனவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய கம்மன்பில, இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்ட பாரிய ஊழல் மற்றும் தரகுப் பணம் ஒளிந்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த ஊழல் நட்டத்தை மக்களின் தலையில் சுமத்தாமல், ஜே.வி.பி கட்சியின் பெலவத்தை கட்சி நிதியிலிருந்தே அரசாங்கம் ஈடு செய்ய வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
இதேவேளை, கலைஞர் சங்கீத் விஜேசூரிய தனது பிரித்தானிய நண்பர் மூலம் நாட்டிற்கு கொண்டு வந்த 23 மில்லியன் டொலர் நன்கொடையை, “சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கையின்படி டொலர் நன்கொடைகளை ஏற்க முடியாது” எனக் கூறி அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கம்மன்பில மேலும் வெளிப்படுத்தினார்.
தற்போதைய உத்தியோகபூர்வ வர்த்தமானியின் படி நிதியமைச்சர் பதவியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவே வகிக்கும் சூழலில், சங்கீத் விஜேசூரியவுக்கு “நிதி அமைச்சர்” என ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மர்ம நபர் யார்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை தாம் முழுமையாகப் படித்துள்ளதாகவும், அதில் வெளிநாட்டு நன்கொடைகளை தடை செய்யும் எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்றும் உறுதியளித்த அவர், இந்த மர்ம நபரின் தன்னிச்சையான செயலால் நாட்டுக்கு வரவிருந்த பெரும் டொலர் இருப்பு அநியாயமாக இழக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் கனடா மற்றும் சர்வதேச கிளைகளிலிருந்து வரவிருந்த நிதிகளுக்கும், உகாண்டாவில் இருப்பதாகக் கூறப்படும் டொலர்களைக் கொண்டு வர முடியாமல் போனதற்கும் இந்த “IMF உடன்படிக்கையையே” அரசாங்கம் சாக்குப்போக்காகப் பயன்படுத்தப் பார்க்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
எனவே, இந்த மர்ம நபரைக் கண்டறிந்து தண்டனை வழங்குவதோடு, 2024ஆம் ஆண்டு முதல் IMF உடன்படிக்கையைக் காட்டி நாட்டுக்கு அநியாயமாக இழக்கப்பட்ட ஒட்டுமொத்த டொலர் நிதிகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துவதற்காக உடனடியாக “ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை” நியமிக்க வேண்டும் என உதய கம்மன்பில அரசாங்கத்திற்கு அழுத்தம் திருத்தமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
![]()