அர்ச்சுனா இந்தியா செல்லத் தடையா?

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்தியாவுக்குள் நுழைவதற்கு இந்திய வெளியுறவு அமைச்சு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத் தளமொன்று தெரிவித்துள்ளது.
இருதரப்பு உறவுகளுக்கும், இலங்கை மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் கருத்துக்களைத் தெரிவித்ததே இந்த நடவடிக்கைக்கு காரணமெனவும் கூறப்படுகிறது.
கச்சதீவை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கூறி, அவர் தமிழக அரசின் மூலம் புதுடில்லியில் உள்ள மத்திய அரசிடம் செல்வாக்கு செலுத்த முயன்றுள்ளதாகவும் இந்தச் செயலின் மூலம் இரு அண்டை நாடுகளுக்கும் இடையே தேவையற்ற இராஜதந்திர சிக்கல்களை உருவாக்க முயன்றதற்காக அவர் இந்திய அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அந்த இணையத் தளம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக, இந்திய வெளியுறவு அமைச்சின் சவுத் பிளாக் அலுவலகம், அந்த பாராளுமன்ற உறுப்பினரை இந்திய அரசால் விரும்பத்தகாத நபராக (persona non grata) அறிவிக்கத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த இராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்பட்டால், அர்ச்சுனாஎம்.பி. இந்தியாவுக்குள் நுழைய வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்படும் அல்லது இடைநிறுத்தப்படும் என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த இணையத் தளம் தெரிவித்துள்ளது.
![]()