தேர்தல் குறித்து முடிவெடுக்க ரில்வினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்த முடிவுகளை பாராளுமன்றமும் தேர்தல் ஆணைக்குழுவுமே எடுக்க வேண்டுமே தவிர, ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் எவ்வாறு அதனை அறிவிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
பாணந்துறையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஆளுங்கட்சியின் பொதுச் செயலாளர் ஒருவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துக்களை நாமல் ராஜபக்ச இதன்போது கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில்,
தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதை பாராளுமன்றமும் தேர்தல் ஆணையாளருமே தீர்மானிக்க வேண்டும்.நாடு முழுவதும் சுற்றித் திரியும் ஒரு கட்சியின் செயலாளர் எவ்வாறு தேர்தலைத் தீர்மானிக்க முடியும்? இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்று அறிவிக்க எந்தவொரு கட்சிச் செயலாளருக்கும் அதிகாரம் இல்லை.இவ்வாறான முடிவுகள் அரசியலமைப்பு ரீதியான நிறுவனங்களின் ஊடாகவே எடுக்கப்பட வேண்டும்.
அண்மித்த காலத்தில் தேர்தல் எதுவும் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படாத போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டங்களுக்கும் தொகுதி சபைக் கூட்டங்களுக்கும் பெருமளவிலான மக்கள் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
இது தற்போதைய அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் வளர்ந்து வரும் அதிருப்தியையும், தமது கட்சியின் மீது கொண்டுள்ள புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.தமது கட்சி பல அரசியல் சவால்களை முறியடித்து, அடிமட்ட அளவில் இன்னும் பலமாக இயங்கி வருவதாகவும், தற்போதைய நிர்வாகத்தின் “மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு” எதிராகத் எமது கட்சி உறுதியாக நின்றுள்ளது.
இளைஞர்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி, ஏமாற்றியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
வெளிநாட்டு நாணய வரத்து, வாகன சலுகைகள், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறை வலயங்களை நிறுவுதல் போன்ற வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
நாட்டின் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதற்கான தெளிவான திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும், அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒன்றுக்கொன்று முரணான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் சாடினார்.
![]()