இலங்கை

யாழ்.திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவும்;  தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. வேண்டுகோள்

இந்திய – இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய விவகாரம் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற எமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தும் இது தொடர்பில் எமது கரிசனைகளை வெளிப்படுத்தினோம்.

பூர்த்தி செய்யப்பட்ட முழுமையான யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய கட்டடம் நேரடியாக யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்ட வேண்டும்.ஆனால் அதன் தளங்கள் மற்றும் பகுதிகள் தொடர்பாகவும் எவ்வாறு அதனை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் குழுவை உள்ளூர் மட்டத்தில் நியமிக்கலாம். யாழ் மாநகர சபை முழுமையாக செய்வதில் சில சிக்கல்களை இருப்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.

இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தீர்மானித்தபடி யாழ் மாநகர சபையிடம் கட்டிடத்தை கையளிக்க வேண்டும்.

அந்த கட்டிடம் தொடர்பாக கூட்டு முகாமைத்துவ முயற்சிகள் தவிர்க்க வேண்டும் என்பதுடன் அரசாங்கம் எடுத்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

அடுத்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரை சந்தித்து இது தொடர்பில் தெளிவுபடுத்தி கலந்துரையாட இருக்கிறோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button