இலங்கை

நாட்டின் நீதித் துறைக்கு ஜனாதிபதியே அச்சுறுத்தல்; முன்னாள் அமைச்சர் பீரிஸ்

நாட்டின் நீதித்துறையின் கௌரவம் மற்றும் சுயாதீனம் தற்போது ஜனாதிபதியினாலேயே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டிய பீரிஸ் முக்கிய விடயங்களை முன்வைத்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “ஏப்ரல் 30 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு மே 25 அன்று வழங்கப்படும் என்றும், அந்தத் தீர்ப்பைக் கௌரவத்துடன் வரவேற்கத் தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஒரு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை அது குறித்த விவரங்களை அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாத்திரமே அறிவார். அதனை மூன்றாம் தரப்பினருடன் கலந்தாலோசிக்க அவருக்கு அதிகாரம் இல்லை.

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ள நிலையில், அவரே இவ்வாறு பேசுவது நீதிபதிகளுக்குப் பிரயோகிக்கப்படும் அழுத்தமாகும்.

இந்தச் செயற்பாடானது நீதித்துறையின் சுயாதீனம் குறித்து அரசமைப்பின் 15 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் மீறும் செயலாகும்.

மேலும், நீதித்துறை விவகாரங்களில் முறையற்ற விதத்தில் தலையிடுவது இலங்கை அரசமைப்பின் 111 (சி) பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிரஜாவுரிமை இழப்பு போன்ற தண்டனைகளுக்குரிய பாரிய குற்றமாகும்.

இந்த விவகாரத்தின் பாரதூரமான தன்மையைக் கருத்திற்கொண்டு, எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து பிரதம நீதியரசருக்குப் பதிவுத் தபால் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் சர்வதேச தொழில்சார் அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பெரும் சுவராக விளங்கும் நீதித்துறையைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button