இலங்கை

அநுர அரசின் 159 மலர்களும் வாடிவிட்டன! – சஜித்தின் குழுவை வளைக்க திரைமறைவு முயற்சி!

“தேசிய மக்கள் சக்தியின் 159 மலர்களும் வாடிவிட்டன. நாட்டை ஆளத் தகுதியானவர்கள் இல்லாததால், சஜித் பிரேமதாஸவின் குழுவினரைத் தேடி அரசு மீன் பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க கேலி செய்துள்ளார்.

 

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

 

“தேசிய மக்கள் சக்தி அரசு தற்போது பாரிய உட்கட்சிப் பிளவுகளுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகித் தடுமாறி வருகின்றது.

 

ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர்களான குமார ஜயக்கொடி நிலக்கரி மோசடியிலும், ஹர்ஷண சூரியப்பெரும திறைசேரி நிதி காணாமல் போனமைக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்.

 

தகுதியானவர்கள் இல்லாமையால் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்முடன் இணைத்துக்கொள்ள அரசு திரைமறைவில் முயற்சித்து வருகின்றது.

 

வரி மூலம் ட்ரில்லியன் கணக்கான பணத்தை அறவிடும் அரசு, எரிபொருள், மின்சாரம் மற்றும் மருந்து விலைகளை உயர்த்தி மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

 

நீண்டகாலப் போராட்டங்கள் மூலம் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசை, ஜனாதிபதியின் நண்பர்கள் இருவர் சீரழிப்பது குறித்து ஜே.வி.பி. குழுவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 

அத்துடன், 159 பேரைத் தவிர வேறு தகுதியானவர்கள் இல்லை எனக் கூறி வந்த அரசு, இன்று குழு இல்லாமல் திண்டாடுவதே எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தேடி வருவதன் மூலம் வெளிப்படுகின்றது.

 

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் மீறி வரும் அரசு, தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை மறைக்கவே தேசிய அரசு என்ற போர்வையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வளைக்கப் பார்க்கின்றது. இதுவே அவர்களின் இறுதி முயற்சியாக இருக்கும்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button