11 ஆம் திகதி முதல் யாழ் – கொழும்பு யாழ்தேவி ரயில் சேவை மீள ஆரம்பம்!

காங்கேசன்துறைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும்- 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில் திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடவுள்ளது.
இச்சேவையானது எதிர்வரும் 11ம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த தினங்களில் கொழும்பிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு வவுனியாவை 11.36 மணிக்கும் கிளிநொச்சியை 12.51 மணிக்கும் யாழ்ப்பாணத்தை 1.59 மணிக்கும் வந்தடையும். புகையிரதம் இறுதியாக 2.33 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும்.
அவ்வாறே எதிர்வரும் செவ்வாய்க் கிழமையிலிருந்து காங்கேசன்துறையில் ஆரம்பிக்கும் புகையிரத சேவையானது யாழ்ப்பாணத்தில் 11 மணிக்கும் கிளிநொச்சியில் 12.14 மணிக்கும் வவுனியாவில் 1.35 மணிக்கும் சென்றடைந்து இறுதியாக கொழும்பு கோட்டையை 7.03 மணிக்கு சென்றடையும்.
இப் புகையிரத்திற்கான கட்டணங்கள் சாதாரண கட்டணங்களாகவே அறவிடப்படவுள்ளன. இவற்றைத் தவிர வழமை போன்று முதலாம் இரண்டாம் வகுப்பு ஆகியவற்றிற்கான ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்தார்.
![]()