கடவுளுமே கருணையுடன் கையணைத்து நிற்பார்!… கவிதை… ஜெயராமசர்மா

சாகா வரம்வேண்டித் தவமிருந்தார் பலரும்
நீண்டநாள் வாழவே வேண்டினார் பலரும்
வேண்டாத அத்தனையும் விரும்பி நின்றார்
வேண்டினார் வேண்டியதை வீணாக்கி விட்டார்
பொய்யென்றும் புழுகென்றும் எண்ணியே நிற்காதீர்
புராணத்தில் வந்த கதையென்று நினைக்காதீர்
அத்தனையும் எங்களுக்கு அமைந்த நல்லபாடம்
அனைவருமே அகத்தினிலே இருத்தி விடவேண்டும்

ஆண்டவனை ஏமாற்ற எண்ணி விடவேண்டாம்
ஆணவத்தை அகத்திலே அமர்த்தி விடவேண்டாம்
அகந்தையை ஆளுமையாய் ஆக்கிவிட வேண்டாம்
அழிவுவரும் என்பதை அகமிருத்த வேண்டும்
ஏமாற்றிப் பிழைப்பவர்கள் எல்லாமே பெறுகிறார்
இறைவனை நம்புவார் இயலாமல் இருக்கிறார்
எத்தனை கேள்விகள் எழுகிறது வாழ்க்கையிலே
அத்தனைக்கும் நல்லபதில் ஆண்டவனே அளித்திடுவான்
நல்லதையே கேட்போம் நல்லதையே செய்வோம்
உள்ளுவதை எல்லாம் உயர்வுடனே எண்ணுவோம்
கள்ளமில்லா மனத்துடன் காலமெலாம் வாழ்ந்தால்
கடவுளுமே கருணையுடன் கையணைத்து நிற்பார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()
