அறிவும் பெறலாம் தெளிவும் பெறலாம்!…. கவிதை…. ஜெயராமசர்மா

அறிவும் வேண்டும் தெளிவும் வேண்டும்
அறிவுடை மாந்தர் தெளிவுடன் இல்லை
தெளிவினைக் காண உதவிடும் அறிவே
பயனுடை அறிவாய் பரந்திடு மெங்கும்
பயனுடை அறிவும் பக்குவத் தெளிவும்
உடையவர் பலரும் உலகிடை இருந்தார்
அவரெலாம் எங்கள் அரும்பெருஞ் சொத்து
அவர்களை நினைப்போம் அகமதில் பதிப்போம்

திருமூலர் எங்கள் மாபெரும் சொத்து
அறிவின் ஊற்று தெளிவின் சமுத்திரம்
ஒவ்வொரு சொல்லும் உன்னதம் உன்னதம்
திருமூலர் சொற்கள் தவமொழி யாகும்
நாத்திகம் பேசுவார் ஆத்தீகம் காட்டுவார்
வேண்டும் அனைத்தையும் விளக்கியே நிற்பார்
விளங்குவார் விளங்குவார் விளங்கார் விளங்கார்
திருமூலர் தவமொழி தெளிந்த நல்லறிவே
வாழ்வை யுணர்த்தும் வழிவகை அறிவார்
வாழ்வைத் தெளிவாய் அறிந்தவர் மூலர்
மூலரின் வார்த்தைகள் முழுவதும் உண்மை
ஆழமாங் கருத்தை அள்ளியே அளிக்கிறார்
அறிவு வேண்டுமா தெளிவு வேண்டுமா
அனைவரும் மூலரை நாடியே செல்லுங்கள்
அள்ளி அள்ளி அவரே தருவார்
அறிவும் பெறலாம் தெளிவும் பெறலாம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()
மூவாயிரம் வருடங்களுக்கு முன் மூலர் சொன்னவை இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது .
மறுபடி உயிர்ப்பித்த ஐயாவுக்கு வணக்கம்.