முச்சந்தி

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்

மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள் குழு, கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் தூதுவர் இசொமடா அகியோ மற்றும் ஜப்பானிய உயர்மட்டக் குழுவினரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியது.

இச்சந்திப்பின் போது மனோ கணேசன் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு:-

“இலங்கையில் வாழும் சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூக – பொருளாதார சவால்கள் குறித்து ஜப்பான் இனிவரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, தோட்டப்பகுதிகளில் வாழும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு நேரடிப் பயன் அளிக்கக்கூடிய உதவித் திட்டங்களை வழங்க முன்வாருங்கள்.”

“எமது மக்களை ஒரு இலங்கை தேசிய இனமாக அடையாங்காணுங்கள். நாம் பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். தற்போதைய அரசு எமது பிரச்சினைகள் குறித்து நிறையப் பேசினாலும், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.”

“இலங்கைக்கு வரலாற்று ரீதியாக அதிகளவு உதவி வரும் நட்பு நாடான ஜப்பான், தனது உதவிகள் இந்நாட்டின் மிகவும் பின்தங்கிய சமூகமான மலையகத் தமிழ் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மனோ கணேசன் இதன்போது வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களான வே. இராதாகிருஷ்ணன், பாரத் அருள்சாமி மற்றும் பிரஜீவன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *