பலதும் பத்தும்

5,000 பேருடன் உறவு; மனைவியிடம் வசமாக சிக்கிய அமைச்சர்

கேரளாவில் சீக்கிரமே தேர்தல் நடக்கும் சூழலில், அங்குள்ள அமைச்சர் ஒருவர் கள்ள உறவில் இருப்பதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு அந்த அமைச்சர் காதல் இல்லாத நபரே உலகில் இல்லை என்றும் தனக்கு இதுபோல 5,000 காதல் உறவுகள் இருப்பதாகச் சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சீக்கிரமே சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மூன்றாவது முறையாகத் தொடர்ந்து தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் அங்குள்ள ஆளும் இடதுசாரிகள் உள்ளன. ஏற்கெனவே, ஆளும் தரப்பு மீது எதிர்ப்பு கணிசமாக இருக்கும் சூழலில், இப்போது கேரள போக்குவரத்து அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கணேஷ் குமார் மனைவி பிந்து மேனன், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் திருமணத்தைத் தாண்டிய கள்ள உறவில் இருப்பதாக விமர்சித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (7) அன்று தனது கணவரை வீட்டில் வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாகப் பிடித்ததாகவும், அப்போது அமைச்சரின் உதவியாளர்கள் தன்னைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பொலிஸாரை கூட வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததாகவும் மேனன் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், 2014இல் திருமணம் ஆனதிலிருந்து தங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் நிலவி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் கடந்த இரண்டு மாதங்களாக வெளியூர் சென்றிருந்தேன். அவர் எனது செல்போன் நம்பரை பிளாக் செய்திருந்தார்.

இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்து, கொல்லம் அருகில் உள்ள வலக்கத்தில் உள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன்.

அப்போது படுக்கையறையில் நான் கண்டதை வார்த்தையால் சொல்ல முடியாது. பார்க்கவே கூடாத சிலவற்றை நான் கண்டேன். ஆதாரமாக வைத்திருக்க அதை நான் போட்டோவாக எடுத்தேன். ஆனால், அவரது ஓட்டுநர் என்னை தடுத்தார்.

இதனால் நான் உடனடியாக போலீசாருக்கு கால் செய்தேன். காவலர்கள் உடனடியாக வந்தபோதிலும், கணேஷின் உதவியாளர்கள் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. மற்றொருபுறம் அந்த பெண்ணை அவர்கள் வெளியேற்றிவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

கணேஷ் குமார் இதுபோல சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை இல்லை. அவரது முதல் மனைவி யாமினி ஏற்கெனவே குடும்ப வன்முறை குற்றச்சாட்டை முன்வைத்தே விவாகரத்து பெற்றிருந்தார். அவரை விவாகரத்து செய்த பிறகே, பிந்து மேனனை மணந்தார். தற்போது சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணியில் உள்ள அவர், பிந்து மேனனின் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியான காங்கிரஸின் தேர்தல் சதி என விமர்சித்துள்ளார்.

அப்போது ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் கணேஷ் குமார், தனக்கு 5,000 காதல் இருப்பதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும், “காதல் இல்லாதவர்கள் முட்டாள்கள்.

மேலும், மூளை இல்லாத பைத்தியக்காரர்கள் கூட பொலிஸாரை தொடர்பு கொள்ளலாம். எனது தனிப்பட்ட விஷயங்களில் யாரும் தலையிடக்கூடாது. நான் ஒரு நல்ல மக்கள் பிரதிநிதி மற்றும் எம்எல்ஏ. ஏழைகளுடன் நிற்பவன், ஊழல் மற்றும் மதவாதம் அற்றவன்.

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். காதலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், பின்னர் விளக்குகிறேன்.

மேலும், இந்தியாவில் பெரும் ஆளுமைகளும் கூட காதல் தொடர்பான விஷயங்களுக்காக டார்கெட் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிறகு மேலும், “கணேஷ் குமாருக்கு ஒன்று அல்ல, 5,000 காதல்கள் உள்ளன என்பதை நெட்டிசன்கள் புரிந்துகொள்ளட்டும்” என மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தைக் கேரளாவில் உள்ள காங்கிரஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. கேரளாவில் பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை எனக் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதிசன் சாடியுள்ளார்.

யார் இந்த கணேஷ்குமார்
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினரான கணேஷ் குமார், மறைந்த அவரது தந்தை ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை நிறுவிய மாநிலக் கட்சியான கேரள காங்கிரஸ் (பி)ன் தலைவராவார்.

2013இல் காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகிய பிறகு, அவர் இடதுசாரி கூட்டணியில் இணைந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறகு பிரனாயி விஜயன் அமைச்சரவையில் அவர் சேர்க்கப்பட்டார்.

2023இல், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக சோலார் ஊழல் தொடர்பாக கணேஷ் குமார் எழுப்பிய பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சிபிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *