இலங்கை

வடக்கு–கிழக்கு நிலை எப்படி இருக்கின்றது?; கேட்டறிந்த நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர்

நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக்குடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்ட நிலையில் குறித்த சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது நோர்வே நாட்டு தூதுவர் மே எலின் ஸ்டெனெரினும் பங்கேற்றார்.

குறித்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின் வாழ்வாதார சவால்கள், ஜனநாயக செயல்முறைகள், மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் அவசியம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து திறந்த மனதுடனும் ஆழ்ந்த புரிதலுடனும் கலந்துரையாடப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நீடித்து வரும் அரசின் பொறுப்புணர்வு தொடர்பான கேள்விகள், நீதியை நிலைநிறுத்தும் செயல்முறைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வது, மற்றும் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டிய சூழல் குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அத்துடன், அரசியல் அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் அவசியம், மற்றும் தமிழர் மக்களின் நீண்டநாள் அரசியல் உரிமைகளை மதிக்கும் வகையில் அர்த்தமுள்ள மற்றும் நிலையான தீர்வை உருவாக்குவதின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நோர்வே நாட்டுடன் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஜனநாயக மதிப்புகள், மனித உரிமைகள், மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதில் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது.

எமது பிரச்சினைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் தொடர்ச்சியான கவனம் செலுத்தி வருகிற நோர்வே அரசாங்கத்திற்கும், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் பணியில் செயற்பட்டு வரும் தூதரின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டோம் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *