பலதும் பத்தும்

மருத்துவ உலகத்தையே அலறவிட்ட வைத்தியர்; 175 பெண்களுக்கு…..

மத்தியப் பிரதேசத்தில் சமூகநல மையம் ஒன்றில், சுமார் 175 பழங்குடியினப் பெண்களுக்கு ஒரே மருத்துவர் ஒரே நாளில் குடும்பக் கட்டுப்பாடு செய்து, தரையில் படுக்க வைத்த அவலம் அரங்கேறி இருக்கிறது.

ஒரு பெண்ணுக்கு 2 நிமிடம் என அடுத்தடுத்து ஆபரேஷன் செய்த மருத்துவர் மீது அம்மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு மருத்துவர் 175 பெண்களுக்கு ஒரே நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை அரங்கேற்றியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பாக் பகுதியில் அமைந்துள்ள சமூக நல மையத்தில்தான் இந்த அவலம் அரங்கேறியிருக்கிறது.

சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 180 பழங்குடியினப் பெண்கள் இந்த முகாமிற்கு வந்திருந்தனர். 30 படுக்கைகள் மட்டுமே கொண்ட அங்கு, வந்திருத்தவர்களில் 175 பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முகாமிற்கு வந்த மருத்துவர் வரிசையாக பெண்களை படுக்கவைத்து மயக்க மருந்து நிபுணரின் எந்தவித அறிவுறுத்தலும் இன்றி ஒரு பெண்ணுக்கு 2 நிமிடம் என கணக்கு வைத்து சரசரவென சத்திரசிகிச்சையை முடித்திருக்கிறார்.

ஒரு சத்திரசிகிச்சையை முடித்து மற்றொரு சத்திரசிகிச்சைக்கு செல்லும்போது, கையுறையை மாற்றவோ, சத்திரசிகிச்சை செய்யும் கருவிகளை ஸ்டெர்லைஸ் செய்யவோகூட நேரம் எடுத்துக் கொள்ளாமல், அடுத்தடுத்து என சுகாதாரமற்ற வகையில் அந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களை படுக்க வைக்க படுக்கை வசதிகூட இல்லாத அந்த இடத்தில், பெண்களை திறந்த வெளியில் பெட்ஷீட்டை விரித்து தரையில் படுக்க வைத்துள்ளனர். ஒரு சில பெண்களை குப்பைத் தொட்டிக்கு அருகில் வெயிலில் படுக்க வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அந்த மருத்துவர் ஒரே நாளில் அத்தனை அறுவை சிகிச்சைகளையும் முடித்துவிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார். இந்த முகாமிற்கு பெண்களை காலை 8 மணிக்கே வரச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நாள் முழுவதும் அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ வழங்கப்படவில்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே தங்களை விட்டுவிட்டார்கள் என பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தி பரவியதை அடுத்து, சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட முதன்மை மருத்துவ அதிகாரியை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. மருத்துவரிடம் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *