முச்சந்தி

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் கம்பெனிகள் அரசு தலையிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளம் உயர்த்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்குப் பதிலாக கம்பெனிகள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டப் பார்க்கின்றன என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் தற்போதைய பணிச்சுமை தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் (TPA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பழனி திகாம்பரம்,

முன்னதாக 20 கிலோ பறித்த இடத்தில், தற்போது 25 கிலோ பறிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இது நியாயமற்றது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும். தவறினால், தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளம் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே நாங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம். ஆனால் தற்போது கம்பெனிக்காரர்கள் மேலதிகமாக கொழுந்து பறிக்குமாறு தொழிலாளர்களை வற்புறுத்துகின்றனர் என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மேலதிகமாக கொழுந்து பறித்தால் எப்படி சம்பள உயர்வு என்று கூற முடியும்? அரசாங்கம் உருப்படியான வேலைகளைச் செய்தால் நாங்கள் ஆதரவு வழங்குவோம், ஆனால் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நாம் அதனை வன்மையாக எதிர்ப்போம் என்றார்.

இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பரத் அருள்சாமி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தாம் எத்தகைய போராட்டத்திற்கும் தயார் என்பதை இதன்போது கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *