தமிழ் மக்களை ஏமாற்றாதீர்; தங்க நகைகள் எங்கே ?

உங்களுடைய தேர்தல் கால வாக்குறுதிகளில் வன்னியில் மீட்கப்பட்ட தங்க நகை விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது அந்த தங்க நகைகள் மீண்டும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்படுமென நீங்கள் உறுதிமொழி வழங்கியிருந்தீர்கள் அந்த வகையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க நீங்கள் எடுத்துள்ள துரித நடவடிக்கைகள் என்ன? வென ஜனாதிபதியிடம் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ் நிதி,கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி டிஜிட்டல் பொருளாதார அமைச்சரும் ,ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்கவிதமே இவ்வாறு கேள்வி எழுப்பிய சிறீதரன் எம்.பி. மேலும் பேசுகையில்,
2024 ஆண்டு ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் தங்களாலும், தங்கள் உறுப்பினர்களாலும் நகைகளைத் திருப்பி ஒப்படைப்போம் என பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டது. தேர்தல்கள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் இருக்கும் தமிழ் மக்களுக்கு எந்த மகிழ்ச்சியான செய்தியும் இதுவரை கிடைக்கவில்லை.
தங்களின் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மனநிலையை இந்த அரசு மனிதாபிமானத்தோடு கரிசனை கொள்ளுமா?
வடக்குக் கிழக்கில் இவ்வாறு தமிழ் மக்களிடம் எடுக்கப்பட்ட தங்கநகைகள் எத்தனை கிலோபவுண்?, நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இம்மக்களின் தங்க நகைகள் எப்போ அவர்களிடம் மீள வழங்கப்படும்? இந்த தங்கநகைகளை மீள அம்மக்களிடம் ஒப்படைப்பதற்கான ஏதாவது ஒரு வேலைத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதா? மொத்தமாக வடக்கு, கிழக்கில் இவ்வாறு தமிழீழ வைப்பகத்தில் தங்கநகைகளை அடகு வைத்தோரின் விபரங்களையாவது உங்கள் அரசுமேற்கொண்டு வெளியிடுமா?
தங்களுடைய தேர்தல் கால வாக்குறுதிகளில் இத்தங்க நகை விடயம் முக்கியத்துவம் பெறுவதால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க தாங்கள் எடுத்துள்ள துரித நடவடிக்கைகள் என்ன?எனக்கேள்விகளை எழுப்பினார்.
இக்கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு வரகால அவகாசம் தேவையென அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரினார்
![]()