யாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி; நாளை முதல் 25 வரை

16 ஆவது தடவையாக யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை முதல் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையில், யாழ்ப்பாணம் முற்றவெளி திடலில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றத்துடன் இணைந்து, வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனத்தினால் குறித்த வர்த்தக கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மூன்று தினங்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் கண்காட்சி நடைபெறும். ஆரம்ப நாளில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்று காலை 10.30 மணியளவில் கண்காட்சி திறந்து வைக்கப்படும்.
பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கௌரவ விருந்தினராக யாழ் இந்திய துணைத் தூதர் சாய் முரளி, சிறப்பு விருந்தினராக யாழ் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இந்த ஆண்டு 400 க்கும் மேற்பட்ட காட்சி கூடங்களை அமைக்கவுள்ளோம். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம்.
தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம். 50 உள்ளூர் முயற்சியாளர்களுக்கும் இலவசமாக காட்சி கூடங்களை வழங்கியுள்ளோம்.
இருநூறு ரூபா நுழைவுக் கட்டணமாக அறவிடப்படவுள்ளது. பாடசாலை சீருடையுடன் வரும் மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது.
பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தி சர்வதேச வழிமுறையை பின்பற்றும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எமது பிரதேசத்திற்கு தேவையானவற்றை இந்த கண்காட்சி ஊடாக அறிமுகப்படுத்தி வருகின்றோம். இம்முறையும் தொழில் நுட்பங்கள், புதுப்பிக்கதக்க சக்திகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
இந்தக் கண்காட்சிக்காக இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வருகைதந்து யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்கள் தங்கி நிற்க போகின்றனர். இதனால் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகள் , உணவக தொழில்துறை சார்ந்தோருக்கும் நன்மைகள் பயக்கும் என்பதுடன் யாழ்ப்பாணத்திற்கான சுற்றுலாத்துறை சார்ந்த நன்மைகள் கிடைக்கும் – என்றனர்.
![]()