பலதும் பத்தும்

பொலிஸாருக்கே தண்ணி காட்டிய ‘பேஸ்புக்’ யுவதி

கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவரை, கண்டி பொலிஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட யுவதி போலிப் பெயரில் முகநூல் கணக்கொன்றை நடத்தி வந்துள்ளார்.

அதில் போதைப்பொருள் பயன்பாட்டையும், வியாபாரத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்து பதிவுகளை இட்டு வந்துள்ளார்.

அதேநேரம், போதைப்பொருள் வியாபாரிகள் குறித்த தகவல்களைத் தருவதாகக் கூறி பொலிஸாரின் நம்பிக்கையை வென்று, அந்த மறைவிலேயே தனது போதைப்பொருள் வியாபாரத்தைச் சூட்சுமமாக முன்னெடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி நகரில் உள்ள விடுதி ஒன்றினைச் சோதனையிட்ட போதே குறித்த யுவதியுடன் தொடர்புடைய மேலும் ஒரு தம்பதியினரும் 2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த யுவதி நடத்தி வந்த போலி முகநூல் கணக்கில், பல காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் நண்பர்களாக இருந்துள்ளனர்.

அத்துடன், உடற்பிடிப்பு நிலையம் ஒன்றை நடத்தி வரும் இவர், ரத்மலானை பகுதியைச் சேர்ந்த ‘சைமா’ என்பவருடைய போதைப்பொருள் வலையமைப்பின் கண்டி முகவராகச் செயற்பட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button