பங்களாதேஷில் வெடிக்கும் வன்முறை – பிஎன்பி கட்சித் தலைவரின் வீடு தீக்கிரை; 7 வயது மகள் படுகொலை

பங்களாதேஷில் பிஎன்பி கட்சித் தலைவரின் வீட்டைப் பூட்டி சில மர்ம நபர்கள் தீ வைத்ததில் கட்சித் தலைவரின் 7வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்தாண்டு பங்களாதேஷில் நடந்த மிகப் பெரிய போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது ஏற்பட்ட மோசமான வன்முறையில் ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டது.
அதன் பிறகு அங்கு இயல்பு நிலை திரும்பவே பல மாதங்களானது. இந்தச் சூழலில் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
முன்னாள் பிரதமர்
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இளம் அரசியல் தலைவரான ஷெரிப் உஸ்மான் ஹாடி கடந்த வாரம் திடீரெனக் கொலைசெய்யப்பட்டார்.

அவர் அடுத்தாண்டு பங்களாதேஷில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்ததுடன், அதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது மர்ம நபர் ஒருவரால் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் படுகாயமடைந்த உஸ்மான் ஹாடி, மேல்சிகிச்சைக்காகச் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து மீண்டும் பங்களாதேஷில் வன்முறை வெடிக்க ஆரம்பித்தது.
7 வயதுடைய மகள்
இந்த நிலையில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சித் தலைவரின் வீட்டை வெளியில் இருந்து பூட்டி சில மர்ம நபர்கள், தீயிட்டனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் கட்சித் தலைவரின் 7 வயதுடைய மகள் உயிரிழந்ததுடன். மேலும், மூவர் படுகாயமடைந்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று சனிக்கிழமை (20) அதிகாலை இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பபானிகாஞ்ச் ஒன்றியத்தின் பிஎன்பி உதவி அமைப்புச் செயலாளரும் தொழிலதிபருமான பெலால் ஹொசைனின் தாயார் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில். “நான் இரவு உணவு சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்றேன்.

அதிகாலை 1 மணியளவில் விழித்தபோது, எனது வீட்டிற்கு அருகே உள்ள என் மகனின் வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டேன்.
இதையடுத்து அலறிக்கொண்டே வெளியே ஓடி வந்தேன். அவர்களைக் காப்பாற்ற முயன்றேன். இருப்பினும், வீட்டின் இரு கதவுகளும் வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தன.
உள்ளே நுழைய முடியவில்லை. இறுதியில் என் மகன் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.அதன் பிறகு அவனது மனைவி நஸ்மா மற்றும் கைக்குழந்தை வெளியே வந்தனர். அவர்களின் மற்ற மகள்கள் இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரு மகள் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். இருப்பினும், இளைய பேத்தி உயிரிழந்துவிட்டார்” என்றார்.
![]()