7 வயது மாணவியின் சடலம் 2 வாரங்களுக்குப் பின் மீட்பு; தாய், தந்தை, தம்பி,பாட்டி பலி

தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல்போன 7 வயது மாணவியின் சடலம் 2 வாரங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவயில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறித்த சிறுமி மண்ணுக்குள் புதையுண்டு இருந்துள்ளார்.
பெரன்னாவ மகா வித்தியாலயத்தில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயிலும், நேதுகி சஹான்யாவின் உடல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக யட்டியந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்னவத்தையிலிருந்து பத்தனேகல வரையிலான வீதியை சுத்தம் செய்யும் போது, அருகில் ஒரு நாய் மண்ணை தோண்டுவதை கவனித்த குழுவினர், சோதனை நடத்தியபோது, கித்துள் மரத்தின் கிளைகளுக்கு அடியில் இறந்த சிறுமியின் உடலை மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக கருவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த மண் சரிவில் சிறுமியின் தாய், தந்தை, தம்பி மற்றும் பாட்டி ஆகியோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரண்டு நாட்களுக்குப் முன்னரே சிறுமியின் தாயின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
![]()