ஒரு இலட்சத்திற்கும் மேல் வீடுகள் சேதம்

சீரற்ற காலநிலையினால் வெள்ளம் மற்றம் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்ககப்பட்ட 23,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 72,000க்கும் அதிகமானோர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வெளியிட்ட புள்ளி விபரத் தகவல்களின்படி நாடு முழுவதும் 16 மாவட்டங்களில் 796 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் 23,041 குடும்பங்களை சேர்ந்த 72,911 பேர் தங்கியிருக்கின்றனர்.
டித்வா புயலின் பின்னர் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களை தொடர்ந்து கடந்த 2ஆம் திகதி வரையில் 22 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாம்களில் 62,000 வரையிலான குடும்பங்களை சேர்ந்த 232,000 வரையிலானோர் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் வெள்ளம் ஏற்பட்டிருந்த மாவட்டங்களில் வெள்ளம் வழிந்தோடிய பின்னர் தமது வீடுகள் சேதமடையாதவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேறி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஆனால் மண்சரிவுகள் ஏற்பட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தவர்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கின்றனர். மேலும் பல குடும்பங்கள் தமது உறவினர் வீடுகளில் வசிக்கின்றனர்.
இதேவேளை அனர்த்த முகாமைத்துவ தகவல்களின்படி வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகளில் எண்ணிக்கை கடந்த வாரத்தை விடவும் தற்போது அதிகரித்துள்ளது. இதன்படி இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் 6164 வீடுகள் முழுமையாகவும், 112,110வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை டித்வா புயலின் போதான சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் சகல மாவட்டங்களிலும் 524,188 குடும்பங்களை சேர்ந்த 1,812,311 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போதான மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களில் சிக்கி 643 பேர் உயிரிழந்துள்ளதுடன். 184 பேர் காணாமல் போயுள்ளனர்.
![]()