பாரிய மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இடங்கள் மக்கள் வாழ முடியாத பிரதேசங்களாக மாறின!

டித்வா சூறாவளியின் பின்னர் பாரிய மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலப் பகுதிகள் மக்கள் வாழ முடியாதளவிற்கு நிலைமை ஏற்பட்டுள்ளதால் அவை தொடர்பில் விசேட கணக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி குறிப்பிட்ட பிரதேசங்கள் தொடர்பில் ஆராய்ந்து, மண்சரிவுகள் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்ட பிரதேசங்களை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசங்களாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய அந்தப் பிரதேசங்களில் நில அளவைத் திணைக்களத்தின் ஊடாக நிலங்கள் மீள அளக்கப்பட்டு, அவற்றின் பெறுமதிகள் தொடர்பில் மதிப்பீடுகள் செய்யப்படவுள்ளதாகவும் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மண்சரிவுகள் ஏற்பட்ட மற்றும் மக்கள் வாழ முடியாத இடங்கள் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்படவுள்ளதுடன். அங்கு வசித்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்குதல் அல்லது வேறு இடத்தில் காணிகளை வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
டித்வா சூறாவளி காலத்தில் நாட்டில் 1200க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 250க்கும் மேற்பட்ட மண்சரிவுகள் பாரியளவில் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தியவையாக அமைந்துள்ளன. மேலும் மலையக மாவட்டங்களில் 15000க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு அபாயங்கள் இருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையிலேயெ காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அது தொடர்பில் கணக்கெடுப்பை நடத்துவதற்கு அவதானம் செலுத்தியுள்ளது.
![]()