‘டித்வா’ சூறாவளி அபாயம் குறித்து இலங்கையை 13 ஆம் திகதியே இந்தியா எச்சரித்து விட்டது; இலங்கை அதனைத் தவற விட்டது

இந்தப் பிராத்தியத்தில் உள்ள பெருங்கடல்களைக் கண்காணித்து சூறாவளி எச்சரிக்கைகளை வெளியிடுவதற்குப் பொறுப்பான பிராந்திய சிறப்பு வானிலை மையத்தை (RMSC) நடத்தும் இந்திய வானிலைத் துறை (IMD), வரவிருக்கும் நிகழ்வுகள் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட ஒன்லைன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டித்வா’ சூறாவளி இலங்கையில் ஏன் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியது’ என்ற தலைப்பில் டிசம்பர் 3 ஆம் திகதியிட்ட இந்த அறிக்கை, இலங்கை போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது .
மேலும் இந்த அறிக்கை இலங்கையின் தரப்பில் ஏற்பட்ட தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்திய வானிலைத் துறை முதலில் நவம்பர் 13 ஆம் திகதி , ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என்று கணித்ததாகவும், நவம்பர் 20 ஆம் திகதி சூறாவளி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நவம்பர் 23 முதல், இந்திய வானிலைத் துறையானது, மூன்று மணி நேர மற்றும் ஆறு மணி நேர வானிலை புதுப்பிப்புகளை வெளியிட்டது. இது நவம்பர் 26 ஆம் திகதி அதன் வலுவடைந்த நிலையைக் குறிக்கிறது. அனைத்து தகவல்களும் இலங்கையுடன் வழக்கமான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு ‘டித்வா’ புயல் இலங்கையைத் தாக்கியது. இந்திய வானிலைத் துறையானது அனைத்து பிராந்திய நாடுகளுக்கும் சேவை செய்கிறது – பங்களாதேஷ், மாலைதீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இதனால் பயன்பெற்று வருகின்றன.
இந்த எச்சரிக்கைகளைப் பயன்படுத்தி இலங்கையில் லட்சக்கணக்கான மக்களை குறுகிய காலத்தில் இடம் மாற்றக்கூடிய விரிவான வெளியேற்ற வழிமுறையை ஏற்படுத்தவில்லை என்றும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
சூறாவளியின் நகர்வு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை மற்றும் முன்கூட்டியே தகவல் இருந்தபோதிலும், இலங்கையால் ஒரு குறிப்பிட்ட அளவிலான வெளியேற்றத்தை மட்டுமே செய்ய முடிந்தது.
இதேவேளை இலங்கையின் வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் நாயகம் அதுல கருணாநாயக்க, நவம்பர் 12 ஆம் திகதி காலை தெரண ‘பிக் ஃபோகஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, கடுமையான வானிலை எச்சரிக்கை குறித்து எச்சரித்தார், இருப்பினும் அவர் ஒரு சூறாவளியை அறிவிக்கத் தவறிவிட்டார். அந்த நேரத்தில் அதை ஒரு சூறாவளி என்று அழைக்க மாட்டேன் என்று கருணாநாயக்க கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
![]()